செவ்வாய், 12 ஜனவரி, 2010

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள்


வாழ்க தமிழ். வளர்க தமிழினம்


பொங்கல் , தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்



உலக இனங்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கிய பழம்பெரும் பேரினமான நமது தமிழினத்திற்கே உரித்தான பொன்னாள். அது நம் பண்பாட்டின் அடையாள நாள். நமக்கென்று ஒரு மொழி உண்டு, நமக்கென்று ஒரு பண்பாடு உண்டு, நமக்கென்று ஒரு வரலாறு உண்டு என்ற கருத்தைச் சொல்ல வந்த பொன்னாள் பொங்கல் பெருநாள்.


மதங்களைக் கடந்து, இனத்தைக் கடந்து, சாதியைக் கடந்து ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் உயிரிலும் கலந்து உணர்வாய் மிளிர்வது. அவ்வகையில் பொங்கல் திருநாள் உழவர் பெருநாளாக மருதநிலத் தமிழர்களின் பொன்னாளாக இருந்து வருகின்றது. இன்றைய நாளில் இயற்கைக்கு நன்றி கூறும் கூறுவதோடு உழவுத் தொழிலுக்கு உயிர்ப்பாக விளங்கிய அனைத்து உயிர்களுக்கும் நன்றி கூறும் விழாவாக இந்நாள் அமைகின்றது.



தைத்திங்கள் அன்று காலைக் கதிரவன் தெற்கில் இருந்து பூமத்திய ரேகையைத் தாண்டி பூமியைக் காணும் காலமே நாம் பொங்கல் நன்னாளைக் கொண்டாடும் காலமாகும். தைத்திங்கள் குளிர் நிறைந்த காலம். அறுவடை மிகுந்த காலமாகும். பொருள் வரவுற்ற காலமாகும்.எனவே தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற தொடர் பழந்தமிழர் வாழ்வில் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.



ஆகவே, உலகத்தமிழர்களுக்கு பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்ளும் அதே வேளையில் உலகத் தமிழர்கள் யாவரும் மொழியால் இனத்தால் சமயத்தால் தமிழர் என்ற நிலையில் ஒன்றுபட்டு நிற்குமாறு அன்போடு வேண்டுகின்றேன். தொகையில் குறைந்த தமிழன் வாழ்வியல், சமூகவியல், அரசியலில் உயர்ந்தவனாகத் திகழ வேண்டுகின்றேன். மிக நீண்ட நெடிய இலட்சியப் பாதையில் நாம் பயனப்படும் காலம் இது.



உலகத் தமிழர்கள் மிக கனமான வரலாற்றுப் பாதையைச் சுமந்து வந்திருந்தாலும் தமிழருக்கென்று தனி நாடு மலரும் காலம் வரலாற்றில் நிச்சயம் உருவாகும். இக்கனவை நனவாக்க உலகத் தமிழர்கள் ஒன்றுபட்டே யாதல் வேண்டும்.


மலர்ந்தொளிரும் தமிழ்ப்புத்தாண்டில் உலகத் தமிழர்களின் உன்னத வேட்கையான தனி நாடு கோரிக்கை வெற்றி பெற உறுதுணையாய் நின்று உழைப்போம். புதிய ஆண்டில் புதிய திருப்பம் காண அனைவரும் ஒன்று பட்டு உழைப்போம்.

வாழ்க தமிழர் வெல்க தமிழினம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக