வெள்ளி, 19 டிசம்பர், 2008

நாம் ஏன் இவற்றைச் செய்யக்கூடாது....


மலேசியத் தமிழர்கள் மொழி உணர்வும் இன உணர்வும் குன்றியிருக்கின்ற இக்காலக்கட்டத்தில் அடுத்த தலைமுறையினைத் தமிழ் தலைமுறையாக உருவாக்குகின்ற கடப்பாடு நம் அனைவருக்கும் உண்டு. ஆகவே, நாம் ஏன் இவற்றைச் செய்யக்கூடாது.


1.உங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுங்கள்
2.உங்கள் வீட்டுக்குத் தமிழில் பெயரிடுங்கள்
3.விழா நாள்களில் பண்பாட்டு உடை அணியுங்கள்
4.பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள்
5.நாள்தோறும் திருக்குறள் படியுங்கள்
6.திருக்குறள் தமிழ்மறை என்பதை எல்லாருக்கும் உணர்த்துங்கள்
7. நமது பண்பாட்டைப் பேணுவதில் கருத்தாய் இருங்கள்
8.ஒரு தமிழன் கெட்டுப் போனால் மட்டும் அந்நேரத்தில் தமிழனே இப்படித்தான் என்றும், அவன் சிறந்திருக்கும் வேளையில் இந்தியன் முன்னேறிவிட்டான் என்று கூறுவதை விட்டுவிட்டு, அவன் உயர்ந்து விளங்கும் போதும் தமிழன் என்றே கூறுங்கள்
9.தமிழிலே பேசுங்கள், தமிழிலே கையெழுத்திடுங்கள்
10. பிறமொழி கலவாமல் தமிழில் பேசுங்கள், எழுதுங்கள்
11.உங்கள் வீடுகளில் நூல்களைச் சேர்த்துப் படிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள்
12.எல்லாரிடத்தும் புரிந்துணர்வோடு பழகுங்கள்
13.பிறரைப் பழிக்கும் அல்லது அழிக்கும் நோக்கம் கொள்ளாதீர்கள்
14.பிள்ளைகளை அன்பு செலுத்தியும் அதே போழ்து கண்டித்தும் கட்டுப்பாட்டோடு வளர்த்தெடுங்கள்
15.முதன்மையான ஒழுக்கத்தைப் பேணி, பிள்ளைகளுக்கும் கற்பியுங்கள்
16.அருவருக்கத் தக்கதும், பண்பாட்டைக் சீர் கெடுக்கும் கருத்துகளைக் கொண்ட திரைப்படங்களைப் பார்க்காதீர்கள்
17.சிக்கல்கள் நேர்ந்தால் பதற்றமடையாமல் ஆற அமர சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுங்கள்
18.பொருளற்ற ஐயப்பாடுகளையும் தவறான கற்பனைகளையும் உற்றவர்கள் மீது கொள்ளாதீர்கள்
19.அளவிறந்த சீற்றம் கொள்ளாதீர்கள்
20.மொழிமானத்தையும் இனமானத்தையும் உயிரெனப் போற்றுங்கள்
21.வீட்டில் குடும்ப உணர்வினைப் பேணுங்கள்
22.குடும்பத்தோடு சேர்ந்து உண்ணும் வழக்கத்தை மேற்கொள்ளுங்கள்
23.பிறரை மதிக்கவும், வணக்கம் சொல்லவும் பிள்ளைகளுக்குக் கற்பியுங்கள்
24.நம் இனத்தை இன்றளவும் சீர்கெடுத்துக் கொண்டிருக்கும் அடுத்துக் கெடுத்தல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல், காழ்ப்பு கொள்ளுதல், பொய்
பேசுதல் போன்ற ஒழுங்கீனங்களைக் கைகொள்ளாமலும் பிறருக்கும்
அந்நோய்களைப் பரப்பாமலும் வாழுங்கள்
25.நம்புங்கள், தமிழரால் முடிந்தால் தமிழால் முடியும்

நன்றி:- மலேசியத் தமிழ்நெறிக் கழகம்

தமிழ் சீனப்பள்ளிகள் மூடப்படவேண்டும்- முக்கிரீசு மகாதீர் கருத்து

மணிமாறன் செராசு, கோலாலம்பூர்


ஐயம் : ஐயா, தமிழ் சீனப்பள்ளிகளை மூடிவிட வேண்டும் என்று முக்கிரீசு மகாதீர் கூறியிருப்பது சரியா?


தெளிவு :


நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி இவ்வாறு இவர்கள் கூறிவிடமுடியாது. சிலரிடையே பரப்பரப்பான கருத்துகளை வழங்கி ஆதரவு தேட முற்படும் பேச்சுதான் அது. ஆனால், தமிழர்கள் நினைத்தால் மூடிவிட முடியும். அப்படித்தான் 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. தோட்டப்புறத்திலுள்ள மக்கள் வெளியேறிய பின் தமிழ்ப்பள்ளிகளை வேறு இடங்களில் நிறுவ தவறிவிட்டனர். இன்னும் பலர் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பவில்லையே! ஒருபக்கம் தமிழ்ப்பள்ளிகளின் தோற்றமும் மாறிவருவதை நீங்கள் உணர வேண்டும். வகுப்பறைப் பெயர்கள் தமிழில் இல்லை, அறிக்கைகள் தமிழில் இல்லை, அறிவியலும் கணிதமும் தமிழில் பயிற்றுவிக்கப்படவில்லை, தமிழில் பயிற்றுவிக்கப்பட வேண்டிய இசை, ஓவியம், கைவினைத்திறன் போன்ற பாடங்களும் சில பள்ளிகளில் தமிழில் பயிற்றுவிக்கப்படுவதில்லை. எனவே, தமிழ்ப்பள்ளிகள் தமிழ்ப்பள்ளிகளாக இருக்கின்றனவா? சிந்தித்துப் பாருங்கள். நாம் விரும்பும் வரை தமிழ்ப்பள்ளிகள் இருக்கும், இல்லையென்றால் படிப்படியாக நம்மவர் போக்காலேயே தமிழ்ப்பள்ளிகள் மாறலாம். ஏனெனில், தமிழர்களில் பலருக்குத் தமிழ்ப்பற்று கிடையாது. அக்கறையும் இல்லை. அயல்மொழி பண்பாட்டு விருப்பு நம்மவரை விட்டு இன்றளவும் நீங்கவில்லை. நாம் சரியாக சிந்தித்தல் வேண்டும்.


நன்றி : தமிழ்நெறி


தமிழருக்கும் திராவிடருக்கும் உள்ள வேறுபாடு என்ன ?

குமரன் கூலிம் கடாரம்

ஐயா: தமிழர் திராவிடர் என்னும் இரண்டுக்கும் இடையிலான பொருள் வேறுபாடு என்ன ?


தெளிவு :

தமிழர் என்ற சொல், முதலில் தோன்றியது;தொன்மையானது.தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களைக் குறிப்பது. தமிழர் என்ற சொல்லை ஆரிய இனத்தார் சொல்ல முற்பட்டபோது, இயலாத நிலையில் திரிந்து உருவாகியது திராவிடர் என்ற சொல்லாகும்.

தமிழர் - தரமிளர்- திரமிளர் - திரமிடர் - திரவிடர் - திராவிடர் என்று திராவிடர் எனும் சொல் உருவாகியது; திராவிடர் என்று ஆரியர் தமிழரைப் பார்த்தே குறிப்பிட்டனர்.பின்னாளில் கால்டுவெல் எனும் அறிஞர் தெலுங்கு, மலையாளம், உட்பட்ட 23 மொழிகளை ஒரு குடும்பமாகக் கட்டமைத்து அந்தக் குடும்பத்தைத் திராவிட மொழிக்குடும்பம் என பெயரமைத்தார். உண்மையில் திராவிடம் என்பது தமிழையே குறிப்பிட்டுள்ளனர்.
நன்றி : தமிழ் நெறி

புதன், 10 டிசம்பர், 2008

தமிழ் நமது உயிர் தமிழ்ப்பள்ளி நமது உடல்

அண்மைய காலமாக அறிவியல் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பதா, தாய்மொழியில் போதிப்பதா அல்லது இரு மொழிகளில் போதிப்பதா? என்ற சிக்கல் தோன்றியிருக்கிறது நாம் அறிந்ததே. இக்கட்டுரை அறிவியல் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிப்பதால் ஏற்படும்
விளைவுகளை ஆராய்கிறது. படித்துப் பயன் பெறுக.


கடந்த 2003-ஆம் ஆண்டு தொடங்கி நமது அரசாங்கம் கணிதம்
மற்றும் அறிவியல் ஆகிய இரண்டு பாடங்களையும் ஆங்கிலத்தில் போதிப்பதற்கு முடிவு செய்த்து நாம் அனைவரும் அறிந்த்தே. 2003-ஆண்டு முதல் கணிதம் அறிவியல் பாடங்களைக் கற்ற மாணவர்கள் இவ்வாண்டுதான் யு.பி.எஸ்.ஆர் தேர்வினை எழுதினர். இதற்கிடையில் இவ்விரு பாடங்களையும் தாய்மொழியிலேயே கற்பிக்கப்பட வேண்டும் என்ற விவாதமும் பிரச்சாரங்களும் தொடர்ச்சியாக நடந்துக் கொண்டிருக்கின்றன.ஒட்டுமொத்தமாகப் பார்க்கின்ற பொழுது இவ்விரு பாடங்களின் தேர்ச்சி விகிதங்கள் மகிழத்தக்க வகையில் அமையவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

நம் நாட்டைப் பொருத்தவரை ஒவ்வொரு இனத்திற்கும் தனிப்பட்ட அரசுரிமைகள் உண்டு. நமக்கு இந்நாட்டு அரசாங்கத்தால் வழங்கப்பட அரசுரிமை தமிழ்ப்பள்ளிகள். இந்நாட்டில் உள்ள பிற இனங்கள் தங்கள் உரிமைகளையும் விழுமியங்களையும் பண்பாட்டு அடையாளங்களையும் மறந்தும் விட்டுக் கொடுத்த்து கிடையாது. ஆனால் 2003-ஆம் ஆண்டு தொடங்கி ஆங்கிலத்தில் போதித்து வந்த அறிவியல் கணிதப் பாடங்களைத் தாய்மொழியில் கற்பிக்க பிற இனத்தவர்கள் முனைப்புக் காட்டும் வேளையில் நாம் மட்டும் இவ்விடயத்தில் சரியாகச் சிந்தித்து செயல்படவில்லை என்பது உண்மை.இனி இவ்விரண்டு பாடங்களும் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழ்ப்பள்ளிகளின் அடையாளம் மாறும்

அறிவியல் கணிதப் பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்டால் நமது தமிழ்ப்பள்ளிகள் தங்கள் உண்மையான அடையாளத்தை இழந்துவிடும் என்பது மட்டும் உறுதி. எனவே,தான் அரசாங்கம் இத்திட்டத்தை அறிமுகம் செய்த நாளிலிருந்து சீனப்பள்ளிகள் இவ்விரண்டு பாடங்களையும் இரண்டு மொழிகளிலும் கற்பித்து தங்கள் பண்பாட்டின் விழுமியங்களான சீனப்பள்ளிகளை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இந்நாட்டில் உள்ள மற்ற இன்ங்கள் மிகத் தெளிவாக சிந்திக்கும் போது நமக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை?

மாணவர்கள் புரிந்துக் கொள்வதற்குச் சிரமப்படுவர்

இவ்விரண்டு பாடங்களும் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்டால், அதில் பயிலும் குழந்தைகள் அவற்றைப் புரிந்து கொள்ள இயலாமல் போகும். இதனால் ஆரம்ப அடிப்படை அறிவாற்றல் இல்லாத நிலையில் மாணவர்கள் பள்ளியை விட்டு வெளிவருவர். நிலைமை இவ்வாறு இருக்க நாட்டின் வளர்ச்சியில் எப்படி இவர்களால் பங்கெடுக்க முடியும்? இது நமது சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.

தமிழ்மொழியின் தரம் குறையும்

இதுவரையில் பயிற்று மொழியாக இருந்த தமிழ்மொழி பாட மொழியாக நிலை மாறும்.இதனால் தமிழ்மொழியின் தரம் குன்றும் என்பதில் ஐயமில்லை. எதிர்கால தலைமுறை தாய்மொழி உணர்வற்றவர்களாகவும் தமிழே தெரியாத தலைமுறையாகவும் உருவாவதற்கு வழி வகுத்துவிடும்.எனவேதான், சீனர்கள் அன்றே மிக விழிப்புணர்வுடன் செயல்பட்டு தங்கள் தாய்மொழியினைப் பாதுகாத்திருக்கின்றனர். ஆனால், நாம் மட்டும் இன்றுவரை ஏமாந்த ஏமாளி சமுதாயமாக இருந்து வருகின்றோம்.

வேற்று இன ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு

அறிவியல் கணிதப் பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்படும் பொழுது இப்பாடங்களைப் போதிப்பதற்கு தமிழரல்லாத சீனரோ அல்லது மலாய்க்கார்ரோ நியமிக்கபடலாம். இது அரசாங்கத் துறையில் குறிப்பாக ஆசிரியர் துறையில் நமது வேலை வாய்ப்பினை வெகுவாக குறைத்துவிடும். இவர்களின் வருகையினால் நம் இன ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்புகள் பறிபோகும். நமது உரிமைகளைப் பறிகொடுத்துவிட்டு சூரிய வழிபாடு செய்வதில் என்ன பயன்?

அறிவியல் கணித கலைச்சொற்கள் அழிவு

ஆங்கில போதிக்கப்பட்டால் இன்றுவரை நமது மொழியறிஞர்களால் உருவாக்கப்பட ஆயிரமாயிரம் அறிவியல் கணித கலைச்சொற்கள் மறைந்து போகும் நிலை ஏற்படும்.இந்நிலை மொழி நிலையில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும். மொழி அழிந்தால் இனம் அழியும் என்பது வரலாற்று உண்மை. மலாக்கா செட்டிகள் இதற்கு நல்லதொரு சான்று.

வாணிப வர்த்தக வாய்ப்புகள் பாதிப்பு

இறுதியாக அறிவியல் கணிதப் பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்டால் நமது தமிழ்ச்சார்ந்த புத்தக நிறுவனங்களும் பெரும் இழப்புகளுக்கு இலக்காகிவிடும். தமிழ்க்கல்வியால் கிடைக்கின்ற வியாபார வாய்ப்புகளும் வர்த்தகங்களும் இனி எட்டாக் கனியாய் அமைந்துவிடும். ஆனால் தாய்மொழியில் போதிக்கப்பட்டால் இவ்வாய்ப்புகள் அனைத்தும் நமது இனத்தவருக்கே கிடைக்க வாய்ப்பிருக்கிறது.இது நமது சமுதாய வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றும்.

தாய்மொழிக்கல்வியும் தமிழ்ப்பள்ளிகளும் நமது அடிப்படை உரிமைகள். இவ்விரண்டையும் கட்டிக் காக்கின்ற பெரும் பொறுப்பு மலேசியத் தமிழர்களான நமக்கு இருக்கின்றது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடலாகாது.

வாய்மொழி பலவும் வழித்துணை யாகலாம்
தாய்மொழி என்பது தடயம் அன்றோ!
காலணி தொலைந்தால் வேறணி வாங்கலாம்
கால்களை இழந்தால் முடந்தான் ஆகலாம்

எனவே, நமது பண்பாட்டின் விழுமியங்களான, மொழியின் முகவரிகளான தமிழ்ப்பள்ளிகள் நிலைபெற அரசியல் விறுப்பு வெறுப்புகளை மறந்து தமிழ்ப்பள்ளிகளைக் காத்திடல் வேண்டும். இல்லையேல் அடுத்த தலைமுறை நம்மை எள்ளி நகைக்கும் இழிநிலைக்கு ஆளாகுவோம்.

அவனவன் வாயா லன்றிப்
பிறனெவன் உண்ண வல்லான்
அவனவன் கண்ணா லன்றிப்
பிறனெவன் காண வல்லான்
அவனவன் செவியா லன்றிப்
பிறனெவன் கேட்க வல்லான்
அவனவன் மொழியினத்தைப்
பிறனெவன் காப்பான் வந்தே!

ஆகவே,நமது தமிழ்ப்பள்ளிகளைக் காத்திட அனைத்துத் தரபினரும் ஒன்றுபடுவோம்.

தமிழா ஒன்றுபடு, தமிழால் ஒன்றுபடு தமிழுக்காகவே ஒன்றுபடு

தமிழ் நமது உயிர் தமிழ்ப்பள்ளி நமது உடல்

புதன், 3 டிசம்பர், 2008

உறுதியும் நன்றியும்


எவரெனத் தடுக்கினும் எவரெனைக் கெடுக்கினும்
என்கை வீசி நடையிடுவேன்!- ஒரு
சுவர்எனைத் தாங்கினும், துரும்பு, கை கொடுக்கினும்
செந்தமிழ் மாலைகள் அவைக்கிடுவேன்!


மலையே குலுங்கினும், வானே இடியினும்
மனங்குலை யாமல் மேல்நடப்பேன்! துயர்
அலைகளுக் கிடையோர் கட்டையே உதவினும்
அதன் திறம் நினைந்து புகழ் கொடுப்பேன்!


கடுஞ்சொல் வீசினும், கணைகளைத் தொடுக்கினும்
கடமையில் துவளேன்; வினைமுடிப்பேன்!- நான்
படுந்துயர்க் கிரங்கிக் கைகொடுப் போர்க்குப்
பைந்தமிழ் மாளிகை கட்டிடுவேன்!


எனைவெறுத் தாலும், எனைச்சிதைத் தாலும்
ஏற்றுள கொள்கைக் குயிர் தருவேன்! ஒரு
தினையள வேனும் துணைவரு வோரைத்
தீந்தமி ழால் நிலை நிறுத்திடுவேன்!

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாரினில் மேன்மை உண்டா?



அவனவன் வாயா லன்றிப்
பிறனெவன் உண்ண வல்லான்
அவனவன் கண்ணா லன்றிப்
பிறனெவன் காண வல்லான்
அவனவன் செவியா லன்றிப்
பிறனெவன் கேட்க வல்லான்
அவனவன் மொழியினத்தைப்
பிறனெவன் காப்பான் வந்தே!



தன்னினம் காப்ப தற்கே
தகவிலான் தன்னி னத்தின்
திண்ணிய நெறியைப் போற்றுந்
திறனிலான் தேர்வார் தம்மை
அன்னிய ரென்றே யெண்ணி
ஆழ்குழி வெட்டி யதனுள்
கண்ணிலா னா வீழும்
கதையிவன் கதையாய்ப் போய்சே


பட்டங்கள் பெற்றா லென்ன?
பதவிகள் பெற்றா லென்ன?
கற்றவர்க் கூடி யொன்றாய்
கலந்துரை யாடி யென்ன?
உற்றதோ ரினத்தால் மொழியால்
ஒற்றுமை யாகா நெறிபால்
பற்றுதல் கொண்டு விட்டால்
பாரினில் உண்டோ மேன்மை
பாவலர் அ.பு.திருமாலனார்