புதன், 3 டிசம்பர், 2008

உறுதியும் நன்றியும்


எவரெனத் தடுக்கினும் எவரெனைக் கெடுக்கினும்
என்கை வீசி நடையிடுவேன்!- ஒரு
சுவர்எனைத் தாங்கினும், துரும்பு, கை கொடுக்கினும்
செந்தமிழ் மாலைகள் அவைக்கிடுவேன்!


மலையே குலுங்கினும், வானே இடியினும்
மனங்குலை யாமல் மேல்நடப்பேன்! துயர்
அலைகளுக் கிடையோர் கட்டையே உதவினும்
அதன் திறம் நினைந்து புகழ் கொடுப்பேன்!


கடுஞ்சொல் வீசினும், கணைகளைத் தொடுக்கினும்
கடமையில் துவளேன்; வினைமுடிப்பேன்!- நான்
படுந்துயர்க் கிரங்கிக் கைகொடுப் போர்க்குப்
பைந்தமிழ் மாளிகை கட்டிடுவேன்!


எனைவெறுத் தாலும், எனைச்சிதைத் தாலும்
ஏற்றுள கொள்கைக் குயிர் தருவேன்! ஒரு
தினையள வேனும் துணைவரு வோரைத்
தீந்தமி ழால் நிலை நிறுத்திடுவேன்!

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

கருத்துகள் இல்லை: