சனி, 29 ஆகஸ்ட், 2009

தமிழன் ரொம்ப நல்லவன்


நாட்டைவிட்டு ஓடிவந்த நாதேறிகளை
நட்புக்கலம் நீட்டி வரவேற்று அடைக்கலம் கொடுத்து
தன் நாட்டையே அவனுக்குத் தாரை வார்ப்பான்
தமிழன் ரொம்ப நல்லவன்

காலம் காலமாய் கட்டிக் காத்த கொள்கைகளை
கடாசிவிட்டு அறிவுக்கு உதவாத அவன்
கொள்கைகளைப் பின்பற்றி அவனோடு கூத்தடிப்பான்
தமிழன் ரொம்ப நல்லவன்

மாற்று இனத்தான் தன்னை மெச்சுவதற்காக
தன் இனத்தானை அவனிடம் காட்டிக் கொடுத்து
அவனிடம் கைத்தட்டல் பெறுவான்
தமிழன் ரொம்ப நல்லவன்

தன்மொழி பள்ளி இருக்க பிறமொழி பள்ளிக்குத்
தன் பிள்ளைகளை அனுப்பி அந்த மொழியில்
தன் பிள்ளைகள் பேசுவதைக் கண்டு பூரித்துப் போவான்
தமிழன் ரொம்ப நல்லவன்

தன் தாய்மொழியைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு
பிறர் மொழியில் உரையாடி அந்த மொழி வளர
நீரூற்றி, உரமிட்டுச் செழிப்பாக்குவான்
தமிழன் ரொம்ப நல்லவன்


தன் பண்பாடு இருக்க அடுத்தவன்
பண்பாட்டைப் பின்பற்றி கோட்டு சூட்டு போட்டு
கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவான்
தமிழன் ரொம்ப நல்லவன்

அடுத்த இனத்தான் தன் பெண்ணை விரும்பினால் மறுப்பு
சொல்லாமல் மணமுடித்து வைப்பான், தன் இனத்தான் விரும்பினால்
சாதி பேதம் பார்த்து பிரித்து சாதி காப்பான்
தமிழன் ரொம்ப நல்லவன்

சொந்த இனத்தையே வெட்டிக் கொன்று அழித்து
தன் இனப்பெருக்கத்தைக் குறைத்து மாற்று
இனத்தான் சிறப்பாக வாழ வழி வகுப்பான்
தமிழன் ரொம்ப நல்லவன்

தனக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது
தன்னடக்கத்துடன் உரக்கப் பேசாமல் அமைதி
காத்து விசுவாசம் காட்டுவதில்
தமிழன் ரொம்ப நல்லவன்

மொத்தத்தில் தன் இன,மொழி, பண்பாடு
வளர்ச்சியை விட பிற இன, மொழி பண்பாடு
வளர்ச்சிக்காக மிகவும் பாடுபடுவதில்
தமிழன் ரொம்ப ரொம்ப நல்லவன்

நன்றி:- திருமதி சந்திரா குப்பன் காப்பார்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

தமிழும் இசையும்

பண்பட்ட எல்லா மொழிகளிலும் இசை வாழ்கிறது. ஆனால், எந்த மொழியிலும் இதை முக்கியக் கூறாகச் சொல்வதில்லை; சிறப்பித்தும் போற்றுவதில்லை. ஆனால், தமிழில் மட்டுந்தான் இசைத்தமிழ் என்ற பிரிவே விளங்குகின்றது. சுதி,பாட்டு,பண்,தாளம், பாடுவோர் உள்ளம், கேட்போர் உள்ளம் ஆகியவை இசைந்தால்தான் அதை இசையென்று தமிழர்கள் கூறுவர். அப்படி இல்லையென்றால் அதன் பெயர் “இரைச்சல்” என்றாகிவிடும். இசைக்குப் “புகழ்” என்ற பெயரும் உண்டு என்பதைத் திருவள்ளுவம் இயம்புகின்றது.


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு

எனும் திருக்குறள் இதனை மெய்ப்பிக்கும்.இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் பண்டைய தமிழர்கள் இசையை எந்த அளவுக்குப் போற்றினார்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இறைவனையே இசைமயமாகக் கண்டவர்கள் தமிழ் மக்கள். ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே இறைவன் எனக் குறிப்பிட்டனர். அதனால் தான் இறைவனைப் பன்னிசையால் பாடிப் பரவினர். இம்முறையில் பண்ணோடு கூடிய பத்திப்பாடல்கள் பைந்தமிழில் பல உள்ளன. அவற்றுள் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் முதலியவை குறிப்பிடத் தக்கன.இந்நூல்களில் உள்ள பத்திப் பாடல்கள் தமிழ்த்தேனோடு இசைத்தேனையும் கலந்து சுவைதருவனவாகும்.

தமிழிசை தோன்றிய காலம், தமிழ்மொழி தோன்றிய காலமே! தமிழ் மக்களின் எண்ணம், சொல்,செயல், வாழ்வு அனைத்தும் இசை கலந்தவையாகவே காட்சியளிக்கின்றன. தமிழர் வாழ்வின் பெரும்பங்கை இசையே ஏற்றுள்ளது. குழந்தைப் பருவத்தில் தாலாட்டு, திருமணத்தில் நலுங்குப்பாட்டு, கருப்பக் காலத்தில் வலைக்காப்புப்பாட்டு, இறப்பின் போது ஒப்பாரிப்பாட்டு, என்று தமிழரின் வாழ்வில் இறப்பு முதல் பிறப்பு வரை இசை இடம் பெற்றுள்ளதும் இசையோடு தமிழர்கள்கள் வாழ்ந்தார்கள் என்பதும் தெளிவாகிறது.


இசை,இனிய கலை என்பதால் அது பயிரையும் வளர்க்கும் ஆற்றல் கொண்டது;மேலும் இசை மருந்தாகவும் பயன்படுகிறது.மனிதர்கள் மட்டுமின்றி அஃறிணை உயிர்களுக்கும் இசை பல வழிகளில் துணைபுரிகிறது. மேலைநாட்டுத் தத்துவ மேதையான “சேக்ஸ்பியர்”இசைக்குக் கட்டுபடாதவன் எத்தகைய கொடுஞ்செயலையும் செய்யக் கூடியவன் என்று கூறுகின்றார். இதனால்தான், இசையால் வசமாகாத இதயம் இவ்வையகத்தில் இல்லை என்று தமிழிசைச் சான்றோர்கள் இயம்புகின்றனர்.

நன்றி :- தமிழிசை
எடுத்தாளப்பட்டது

புதன், 12 ஆகஸ்ட், 2009

தாய்மொழியும் தாய்க்குலமும்

தாய் பேசும் மொழியே தம் மகவுக்கு அறிமுகமாகும் முதன்மொழியாகும் . அதுவே, தாய்மொழியாகவும் அமைகின்றது. எனவே, எம்மொழி பயின்றாலும் தாய்மொழியைப் பயிற்றுவிக்க வேண்டியது தாய்மார்களின் தலையாய பொறுப்பாகும். நம் தமிழ்த்தாய்மார்கள், தம் பிள்ளைகளுக்குப் பாலூட்டுவது போலவே தாய்மொழியையும் மறவாது ஊட்டும் மொழிப்பற்றுள்ளவர்களாக இருக்க வேண்டும். அமுதூட்டும் அன்னை, அமிழ்தினினும் இனிய தமிழையும் சேர்த்து ஊட்டவேண்டிய கடமை தாய்க்கு உண்டு. அஃது அவளின் பிறவிப் பெருங்கடன் என்பதை மறுக்கலாகாது.


நாடி நரம்புக்குள் நுழைந்து, குருதியில் கலந்து உணர்வுகளைத் தட்டியெழுப்பும் ஆற்றல் தமிழுக்கு உண்டு! அந்த ஆற்றலைப் பிள்ளைகளின் மனதில் ஆழப்பதியச் செய்யவல்லது இசைத்தமிழாகும். இசைத்தமிழ் நமக்குக் கிடைத்தற்கரிய; அருஞ்சாதனைக்குரிய கலையாகும். இசைக்கு மயங்காத சிசு ஏது? “தமிழே! தேனே! கண்ணே தாலேலோ” என்ற ஆராரோ பாடல் கேட்டு, குழந்தை அயர்ந்து உறங்காதோ? இன்றைய தாய்மார்கள் பலருக்குத் தாலாட்டுப் பாடவே தெரியாது என்கின்றனர். ஏழாவது வயதில் கல்வி கற்க பள்ளி செல்லுமுன் ஏழ்ப்பிறவிக்கும் தொடரக்கூடிய சொந்தமாகத் தாய்மொழியின் அவசியத்தை உணரும் வகை செய்தல் ஈன்றவளின் எண்ணருங்கடமையாகும்.! செம்பவள வாய் திறந்து “அம்மா” என்று மழலை பேசத் தொடங்கும்போதே “மம்மி” என மொழிமாற்றம் செய்வதை ஈனச்செயலெனக் கருத வேண்டும் ஈன்றவள்! பள்ளிச் செல்லத் துவங்கியதும் வேற்று மொழிகள் பேசத் தொடங்கும் பாலகனுக்குத் தாய்மொழியறிவின் அவசியத்தையும் தகைவுடன் உணர்த்த வேண்டும் தாய்குலம்.

தாய்மார்கள் தம் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே ஒளவையை, பாரதியை, வள்ளுவரை, கம்பரை, இளங்கோவை அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும். கூடவே, பாரதிதாசனையும் திரு.வி.க வையும் நினைவுபடுத்தி வைக்க வேண்டும். அவர்தம் தேனூறும் தமிழைச் சுவைக்கச் செய்ய வேண்டும். “தமிழ் எங்கள் தாய்மொழி” என்று பெருமை கொள்ளும் நாம், நமது பிள்ளைச் செல்வங்களும் அத்தகைய பெருமையும் பூரிப்பும் அடையும் வண்ணம் தாய்மொழியின்பால் ஈடுபாடு கொள்ளச் செய்ய வேண்டும்.

சிலர் தமிழில் பேசவே வெட்கப்படுகின்றனர். தமிழ் எங்கள் தாய்மொழி என்ற உணர்வே அவர்களுக்கு ஏற்படுவதில்லை. படிப்பறியாப் பாமர மக்கள், ஏழை எளியவர்கள் போன்றவர்கள் மட்டுமே பேசும் மொழியென தமிழைப் புறக்கணிக்கும் பேதையர்கள் அவர்கள்! இத்தகையொர் நம் மத்தியில் உலாவரக் காரணமாக அமைந்தவை பெற்றோரின் அறியாமையும் வேற்று மொழிமீது கொண்ட மோகமும்தாமே? நஞ்சுக்கும் ஈடான இந்த எண்ண விதைகளைப் பிள்ளைகளின் பிஞ்சு மனதில் தீவிவிட பெற்றோர்களே- அதுவும் தாயே- காரணமாக இருந்துவிடுவது கொடுமையல்லவா? தாயானவள் எவ்வளவுதான் படித்துப் பட்டம் பெற்றுப் பார்புகழ பெரும் பதவியில் வீற்றிருந்தாலும் தன் சேயோடு தமிழ்மொழியில் பேசுவதைப் பழக்கமாகவும் வழக்கமாகவும் கொண்டால்தான் இந்நிலையை மாற்றியமைக்க இயலும்.

கள்ளங்கபடமற்ற பால்போலத் தெளிந்த நெஞ்சுடன் தாயையே தமது உலகமும் வாழ்வுமாக்க் கருதி தாயிடமே அடைக்கலம் புகுபவர்கள் பிள்ளைகள். அவர்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் உருவாக்குவது மட்டுமல்லாது தாய்மொழிப் பற்றுள்ளவர்களாகவும் வளர்த்து ஆளாக்க வேண்டுவது அன்னையர்தம் அரும்பெரும் பணியல்லவா?

நன்றி:-
ந.மகேஸ்வரி
ஆறாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

புத்திலக்கியங்களும் புது படைப்பாளிகளும்

இன்றைய நவீன உலகில் பல புத்தம் புது எழுத்தாளர்கள் பலர் உருவாகி வருகின்றனர். எழுத்துலகில் காலெடுத்து வைத்திருக்கும் அவர்கள் இனி இந்த மொழிக்கும் பிறந்த இந்த இனத்திற்கும் மேற்கொள்ள வேண்டிய பணிகளைச் சுட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இன்றைய எழுத்தாளர்களில் பலர் தாங்கள் என்ன எழுதுகிறோம் என்று தெரியாமல் எதையெதையோ எழுதித் தொலைக்கின்றனர். அதற்குப் பாராட்டும் பரிசும் கிடைக்கின்றது. இலக்கை நோக்கிப் பயணிப்பதுதான் இலக்கியம் . மாறாக எவ்வித இலக்கும் இல்லாமல் மனம் போன போக்கில் எழுதுவது எல்லாம் படைப்புகள் ஆகா. நமது மலேசிய புத்திலக்கியவாதிகள் சிலரின் படைப்பினைத் தங்கள் பார்வைக்குக் கொடுக்கின்றேன். அதில் என்ன பின்நவீனத்துவம் இருக்கின்றது என்பதனை ஆராய வேண்டுகின்றேன். எழுதுவதை யாரும் குறைச்சொல்லவில்லை. ஆனால், என்ன எழுதுகின்றோம், அதனால் ஏற்படும் விளைவுகளையும் நன்கு ஆராந்தறிதல் வேண்டும். எனவே, தான் பாவேந்தர் “இலக்கணமும் இலக்கியமும் தெரியாதான் ஏடெழுதல் கேடு நல்கும் என்றார்.

நமது மொழி மிகத் தொன்மையான மொழி, நமது பண்பாடு மிக உயரிய பண்பாடு. அவற்றையெல்லாம் கட்டிக் காத்து அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கின்ற பொறுப்பு இலக்கிவாணர்களான புத்திலக்கிய வாணர்களுக்கு அதிகம் உண்டு.

ஆனால், எவற்றையெல்லாம் எழுதக்கூடாதோ அவற்றையெல்லாம் எழுதுவதைதான் நாகரீகம், புத்திலக்கியம் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.



காட்டு 1


தூசிகள் படர, அந்த முதல் போஸ்டரில் நின்றிருந்தது ஒரு நிர்வாணப் பெண். சிறு அதிர்வுக்குள்ளிருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த போஸ்டர் கீழே சரிந்து தானாக விரிந்தது, யோனி காட்டியபடி இரு கால்களையும் அகல பரப்பி அமர்ந்திருக்கும் பெண்ணின் படத்தைக் காட்டியது. மயக்கமே வருவது போல ஆகிவிட்டது.


காட்டு 2

மீண்டும் ஒரு வசந்தகாலம் மலரும்
என்கிற செய்தியைக் கொண்டு வந்து
சேர்த்தவன் ஆண்குறியின் வரலாற்று பலவீனம்


இம்மாதிரியான கதைகளும் இலக்கியங்களும் நமது வாழ்க்கைக்கு எவ்வகையில் பயனைத் தருகின்றன. யாரையும் எழுத வேண்டாம் என நாம் கூறவில்லை. ஆனால், நமது பண்பாட்டுக்கு ஒவ்வாத, பண்பாட்டை சீர்குழைக்கின்ற தேவையற்ற சொல்லாடல்களைத் தவிர்தல் நலம் என்கிறோம். படைப்பாளியாக இருப்பவர்கள் மற்றவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டுமே ஒழிய மொழிக்கொலைக்கும் பாலியல் உணர்வுகளையும் தூண்டும் அளவிற்கு எழுதுதல் கூடாது.

நவீன இலக்கியத்திலும் பண்பாட்டையும் மொழியையும் வளர்க்கின்ற பணியினை இவர்கள் முன்னெடுத்தால் சிறப்பு. ஆங்கிலேயருக்கென்று ஒரு பண்பாடு உண்டு, மொழி உண்டு, நாகரீகம் உண்டு. ஆனால், அவற்றை விட உலக இனங்களுக்கே நாகரீகம் கற்றுக் கொடுத்த நமக்கென்று ஒரு தனி பண்பாடும் வரலாறு உண்டு.
எனவே தான் பாரதிதாசன் சொன்னார்

ஏற்றமுறச் செய்வதுவும் மாற்றமுறச் வைப்பதுவும் ஏடே யாகும்.

அதையும் மீறி நாங்கள் எப்படியும் எழுதுவோம் எதை வேண்டுமானாலும் எழுதுவோம் என்று கொக்கரிப்பவர்கள் தலைக்கணத்தோடு இலக்கியம் படைப்பவர்கள் என்று சொல்வதை விட வேறொன்றுமில்லை.

வெறும் பரிசுக்கும் புகழுக்கும் பாராட்டுக்கும் மேடைக்குமாக கதை எழுதுபவர்கள் இவர்கள் என்றால் முற்றிலும் தகும். மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவிட்டு அதில் மலிவு விளம்பரத்தை தேடிக்கொண்டு பிழைப்பு நடத்துபவர்கள் இவர்கள். தற்கால நடப்புகளையும் நிகழ்கால நிதர்சனங்களையும் இலக்கியமாகப் பதிவாக்குகிறோம் என்று கொக்கரிக்கும் இவர்களுக்கு எழுதுவதற்குக் கிடைத்திருப்பதும் கண்ணுக்குத் தெரிவதும் வெறும் பாலியல் சம்பந்தப்பட்ட விசயங்கள் தான்.

பாவம் இவர்களைக் குற்றம் சொல்லி என்ன இருக்கிறது. விடலைப் பயல்கள் பாலியலை விட்டால் வேறு எதை அறிவார்கள்? பொடியள்களுக்கு இப்போதைக்குப் பாலியல் பரவசத்தை விட்டால் வேறு எதற்கு அலைவார்கள்? என்று நாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. இளமை வேகத்தில் காட்டாற்று வெள்ளமாக கண்மண் தெரியாமல் தலைதெறிக்க ஓடும் இவர்களின் தலையில் குட்டுவைத்து சரியான வழியைக் காட்டுவது சமுதாயப் பொறுப்புணர்வும் மொழிக் காப்புணர்வும் உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.

ஆகவே, புத்திலக்கியவாணர் அன்பர்களே, இதனைச் சற்று சிந்தியுங்கள்.

நாயும் வயிற்றை வளர்க்கும்;
வாய்ச்சோற்றைப் பெரிதென்று நாடலாமோ?

போய் உங்கள் செந்தமிழின்
பெருமையினைப் புதைப்பீரோ?

எம்தமிழை அறிவீரோ??
தமிழறிவும் உள்ளதுவோ
உங்கட் கெல்லாம் ?

வெளியினில் சொல்வதெனில்
உம்நிலை வெட்கக்கேடன்றோ ? நீவீர்

கிளி போலச் சொல்வதன்றித்
தமிழ் நூல்கள் ஆராய்ந்து
கிழித்திட்டீரோ.