புதன், 7 அக்டோபர், 2009

திருக்குறள் காட்டும் ஒழுக்கம்




திருவள்ளுவர் நம் வாழ்க்கைக்கு விட்டுச் சென்றுள்ள கருவூலம் திருக்குறள். அது, தமிழர்களின் வழிகாட்டி நூல். திருக்குறளுக்குப் பல அறிஞர்கள் விளக்கம் எழுதியுள்ளனர். மாணவர்களுக்காகத் திருக்குறளை எளிமையாக விளக்கி எழுதிய அறிஞர்களுள் முத்தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் (கி.ஆ.பெ) அவர்களுள் ஒருவர் ஆவார்.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

என்ற குறளில் உள்ள ‘உயிரினும்’ என்ற ஒற்றைச் சொல்லுக்கு அற்புதமான முறையில் விளக்கம் தருகின்றார் கி.ஆ.பெ. அவர்கள்

விழுப்பம் என்பதற்குக் குணம்,நலன்,புகழ்,பெருமை,உயர்வு என்ற பல பொருள் உண்டு எனத் தெளிவாகக் கூறுகின்றார். இவ்வுலகில் இழந்தால் திரும்பப் பெற முடியாதவை இரண்டு. ஒன்று ஒழுக்கம்; மற்றது உயிர். ஆதலால், ஒழுக்கத்திற்கு உவமை கூற எண்ணிய வள்ளுவர், போனால் திரும்ப வராத உயிரைத் தேடிப் பிடித்து வந்து உவமையாகக் கூறி இருப்பது போற்றத்தக்கது என்கிறார் கி.ஆ.பெ அவர்கள்.

‘உயிரினும் சிறந்த பொருள் வேறு எதுவுமில்லை’ என்ற பலருடைய கருத்தைத் திருவள்ளுவர் மறுக்கின்றார். உண்மையில் உயிரைவிட மேலான ஒன்று உள்ளது. அஃது ஒழுக்கம் மட்டுமே என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார். இதைத்தான் ‘உயிரினும்’ எனும் ஒற்றைச் சொல் தெரிவிக்கின்றது என கி.ஆ.பெ விளக்கம் தருகின்றார்.

உயிருடைய எவரும் உயர்ந்தவராக்க் கருதப்படுவதில்லை. ஒழுக்கம் உடைய சிலரே உயர்ந்தவராகக் கருதப்படுவர். ஆதலின், உயிரைக் காப்பதைவிட ஒழுக்கத்தைக் காப்பதே சிறப்பு என்பதைத்தான் திருக்குறளின் ‘உயிரினும்’ என்ற சொல், சொல்லாமல் சொல்வதாக மேலும் அவர் விளக்குகிறார்.

மானம் இழப்பதா? அல்லது உயிரை இழப்பதா? என்ற ஒரு கொடிய நிலைமை ஏற்பட்டால் அந்த நிலையிலும் ‘மானத்தை இழவாதே’ மாறாக, உயிரை இழந்து விடு’ என்ற உயர்ந்த நெறியை வள்ளுவர் உயிரினும் என்ற சொல்லில் ஆணித்தரமாக உணர்த்துகின்றார்.

ஒருவன் உயிரை இழந்துவிட்டால் அதற்காக அழுது புலம்பும் துன்ப நிலை அவனுக்கு ஏற்படுவதில்லை. மற்றவர்களுக்கே அந்நிலை ஏற்படுகின்றது. ஆனால், அவன் ஒழுக்கத்தை இழந்துவிட்டால் அதற்காக அழுது வருந்தும் துன்ப நிலை பிறருக்கு ஏற்படுவதில்லை. அந்நிலை அவனுக்கே ஏற்படும் என்ற சிறந்த கருத்தையும் வள்ளுவர் ‘உயிரினும்’ என்ற அருஞ்சொல்லில் புதைத்துள்ளார் என்று கி.ஆ.பெ விசுவநாதம் அழகுபடக் கூறுகின்றார்.

நன்றி:-
-திருக்குறள் புதைப்பொருள்
[எடுத்தாளப்பட்டது]

புதன், 23 செப்டம்பர், 2009

தமிழர் வாணிகம்

தமிழ் நாட்டின் மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருக்கின்றபடியால் தமிழர் இயற்கையாகவே அயல்நாடுகளுடன் கப்பல் வாணிகம் செய்வதில் தொன்று தொட்டு ஈடுபட்டிருந்தனர். மேலும், கடற்கரை நிலங்களில் வாழ்ந்தவர்கள் நாள்தோறும் கடலில் சென்று மீன் பிடித்து வாழ்க்கையை நடத்தினார்கள். ஆகையால், கடலில் போய் வருவது தமிழர்களுக்குப் பழங்காலம் முதல் இயற்கையான தொழிலாக இருந்தது.


கடல் வாணிகம் செய்யும் தமிழர்கள் மரக்கலங்களில் உள்நாட்டுச் சரக்குகளை ஏற்றிச் சென்று அயல்நாடுகளில் விற்றனர். அந்நாடுகளிலிருந்து வேறு பொருள்களைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தனர். இவ்வாறு கொற்கை, தொண்டி, பூம்புகார் போன்ற தமிழ்நாட்டுத் துறைமுகப் பட்டினங்களிலிருந்து மரக்கலங்களில் புறப்பட்டுச் சென்று கிழக்குக் கடல் ஓரமாகவே நெல்லூர், கலிங்கம் போன்ற பட்டினங்களுக்குச் சென்று வந்தனர். இவ்வாறு நடைப்பெற்ற வாணிகம் கரையோர வாணிகம் எனப்படும்.



தமிழ் நாட்டிலிருந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள இந்தோனேசியத் தீவுகளுக்கும் சென்று தமிழர்கள் வாணிகம் செய்தனர். இந்தத் தீவுகளைத் தமிழர்கள் “சாவகம்” என்று அழைத்தார்கள். சாவக நாட்டின் வாசனைப் பொருள்களையும் சீனத்திலிருந்து அங்குக் கொண்டு வரப்பட்ட பட்டுத் துணிகளையும் வாங்கி வந்து தமிழ் நாட்டில் இவர்கள் விற்றனர். இவ்வாறு வங்காளக்குடாக் கடலைக் கடந்து நடுக்கடலில் கப்பலோட்டிச் சென்று வாணிகம் நடுக்கடல் வாணிகம் என்றழைக்கப்பட்டது.


இவ்வாறு வாணிக நிமித்தமாகக் கடலில் செல்லுகையில் அவர்களின் மரக்கலங்கள் காற்றின் வேகத்தினால் திசை மாறிப் போகும்போது கப்பல்கள் சில புயலில் அகப்பட்டு, நீரில் மூழ்கியதும் உண்டு. நடுக்கடலில் காற்றினாலும் மழையினாலும் புயலினாலும் துன்பம் நேர்ந்த போதும் அவற்றைப் பொருட்படுத்தாமல் வணிகர்கள் மரக்கலங்களைக் கடலில் ஓட்டிச் சென்றனர். இயற்கையாகவே ஏற்படுகின்ற இந்தத் துன்பங்கள் அல்லாமல், கப்பல் வணிகருக்குக் கடற்கொள்ளைக்காரர்களாலும் சொல்லொண்ணாத் துன்பங்கள் நேரிட்டன. எனவே, இவர்கள் பாதுகாப்புக் கருதி கூட்டங்கூட்டமாகச் சென்றதோடு, வில் வீர்ர்களையும் உடன் அழைத்துச் சென்றனர்.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது தமிழர் வாக்கு. வணிகத் துறையில் இவ்வளவு துன்பங்கள் இருந்தும் அக்காலத்துத் தமிழர்கள் அயல் நாடுகளோடு தரை வழியாகவும் கடல் வழியாகவும் தொடர்புக் கொண்டு பொருள் ஈட்டினர். அவர்களைச் சேர சோழ பாண்டிய மன்னர்களும் ஊக்கினர். குறிப்பாக, கடல் வாணிகத்தின் வழி பெருஞ்செல்வத்தை ஈட்டினவர்களுக்குப் பட்டம் அளித்துச் சிறப்புச் செய்தனர்.


நன்றி:- பழங்காலத் தமிழர் வாணிகம்

வியாழன், 3 செப்டம்பர், 2009

தனித்தமிழ் அரிமா இர.ந.வீரப்பனார்

இன்று உலகம் சுற்றிய மலையகத் தமிழர் பேராசிரியர் இர.ந.வீரப்பனார் அவர்களின் நினைவு நாள். தமிழே காற்று; தமிழர் நலமே மூச்சு என முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்ப்பணியாற்றியிருக்கின்ற தகவிலார். அன்னாரின் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது


இப்புவிப் பந்தில் தமிழர் வாழ்கின்ற நிலம் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் தம் காலடி பதித்தவர் பேராசிரியர் இர.ந.வீரப்பனார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தைத் தோற்றுவித்து உலகாள அவ்வமைப்பிற்கு நூற்றாண்டு காலம் தலைவராக இருந்தவர் ஐயா.வீரப்பனார்.


தமிழ்மொழி வளர்ச்சி, தமிழின மீட்சி என்றெல்லாம் தமிழியச் சிந்தனையுடன் தம் வாழ்க்கையை இணைத்துக் கொண்ட பேராசிரியர் பிறந்தது ஒரு நாடு, வாழ்ந்தது ஒருநாடு, மறைந்தது ஒரு நாடு. மலையகத் தமிழர் என்று இர.ந.வீரப்பனாரைக் குறிப்பிட்டால் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த இலங்கைத் தமிழர் என்று பொருள்படும்;அழகிய மலைகளைக் கொண்ட மலேசியத் தமிழர் என்று பொருள்படும். கண்டி மாநிலத்தில் தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்த நுவரெலியாவில் பிறந்த இவர் பின்னாளில் மலேசியாவிற்குக் குடிபெயர்ந்தார். ஆரிய மேலாண்மையும் ஆணாதிக்கச் சிந்தனையும் சூழ்ந்திருந்த தமிழ் மக்களிடம் பெண்மையைப் போற்றுதல் தமிழர் மரபு என்பதை வலியுறுத்தும் வண்ணம் தம் பெயருக்குரிய தலையெழுத்தாக முதலில் தாயின் பெயரையும் அடுத்ததாக தந்தையின் பெயரையும் இணைத்துக் கொண்டார்.


இரத்தினம் அம்மாள்- நடேசன் இணையருக்கு 1930, ஆகத்து 6-ஆம் நாள் தோன்றிய இவர் ,தமிழகம், திண்டிவனம் எண்டியூருக்கு தம் பெற்றோருடன் குடி பெயர்ந்து அதன் பின் மலேசியாவிற்கு வந்தார். இங்கு கல்வியைத் தொடர்ந்து ஆசிரியர் பணியை மேற்கொண்டார். 1953இல் ஈச்ச மரத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொடங்கி தொடர்ந்து தென்னை மரத் தோட்டத் தமிழ்ப்பள்ளி, இரசாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான் மிட்லேண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பந்திங் சுங்கை ச்சோ தமிழ்ப்பள்ளி, காப்பார் நகரத் தமிழ்ப்பள்ளி என பணியாற்றி 1985இல் ஓய்வு பெற்றார். ஆயினும் 1990 வரி கிள்ளான் அப்துல் சமாட் இடைநிலைப்பள்ளி பள்ளியில் தமிழ்க் கற்பித்த இவர் 1990 உடன் தன் ஆசிரியப் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


1951-ஆம் ஆண்டு, நாகம்மாள் என்னும் நல்லாளை மணந்த வீரப்பனாரின் திருமேனி, பொன்னி, அருணன், முல்லை ஆகிய நான்மக்களும் குடும்ப வாழ்வை அமைத்துக் கொண்டனர். ஏறக்குறைய 45 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்கெல்லாம் வாழ்ந்த தமிழர்களுடன் தொடர்புக் கொண்டு தமிழையும் தமிழர்தம் பண்பாட்டையும் இடையறாது பற்றியொழுக வேண்டிய அவசியம் பற்றி அந்தந்த நாட்டு பொறுப்பாளர்களிடம் வலியுறுத்தியும் வந்தார்.

முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ள பேராசிரியர், கடைசியாக எழுதிய நூல் “உலகத் தமிழர்”- பாகம் 3 என்பதாகும். அந்த நூல் வெளியீட்டு விழாவில் கூட அவரால் முழுமையாக ஈடுபட முடியாத அளவிற்கு இர,ந.வீரப்பனாருக்கு உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. இலக்கியத் தேனீ என்றழைப்பதைவிட தமிழ்ப்போராளி என்று இவரைக் குறிப்பிடலாம். படைக்கருவி ஏந்தாமல் தாளையும் கோலையும் துணை கொண்டு வடித்த தமிழியச் சிந்தனைகளையே கருவியாகக் கொண்டவர் பேராசிரியர் அவர்கள்.

‘வியட்நாமிற்கு’ பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இவருக்கு ஈடேறாமல் போனது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஏழாவது மாநாட்டை வெள்ளி விழா மாநாடாக சென்னையில் நடத்திவிட்டு சொந்த கிராமத்திற்குப் போன வீரப்பனார், அதற்கு முன்பே மிகவும் உடல் நலிவுற்றிருந்த நிலையில் மேலும் பாதிப்புற்று 1999 ஆம் ஆண்டு இதே நாளில் தமிழகத்தில் இயற்கை எய்தினார். ஆனாலும், அவர் வடித்துத் தந்த தேனொத்த தமிழியச் சிந்தனைகள் உலகத் தமிழர்தம் சிந்தையை ஆளும் எந்நாளும்! பேராசிரியரைப் பற்றி உலக அளவில் ஏராளமானோர் நூல்களைப் புனைந்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத் தகுந்தோர் தமிழகப் பாவலர் கதிர் முத்தையனார், இலண்டன் சுதேரா முருகையன் ஆகியோர் ஆவர்.

புதிய சிந்தனையும் மாறுபட்ட பார்வையும் கொண்டிருந்த இர.ந.வீரப்பனாரின் நெஞ்சத்தில், எளியோருக்கு இரங்கும் கனிவு’ எப்பொழுதும் நிறைந்திருக்கும்....


போற்றிடுந் தமிழ் இலக்கியமாக் கழகம்
ஏற்றிய இரா.ந.வீரப்பத் தமிழன்
பயனிடும் தனித்தமிழ் பாரெல்லாம் பரவ
நயனிடும் தொண்டால் நற்பணி செய்வோன்'

பாவலர் சா.சி.குறிஞ்சிக்குமரனார்
பாவணர் தமிழ் மன்றம், மலேசியா

நன்றி :- நக்கீரன் - மலேசிய நண்பன்


சனி, 29 ஆகஸ்ட், 2009

தமிழன் ரொம்ப நல்லவன்


நாட்டைவிட்டு ஓடிவந்த நாதேறிகளை
நட்புக்கலம் நீட்டி வரவேற்று அடைக்கலம் கொடுத்து
தன் நாட்டையே அவனுக்குத் தாரை வார்ப்பான்
தமிழன் ரொம்ப நல்லவன்

காலம் காலமாய் கட்டிக் காத்த கொள்கைகளை
கடாசிவிட்டு அறிவுக்கு உதவாத அவன்
கொள்கைகளைப் பின்பற்றி அவனோடு கூத்தடிப்பான்
தமிழன் ரொம்ப நல்லவன்

மாற்று இனத்தான் தன்னை மெச்சுவதற்காக
தன் இனத்தானை அவனிடம் காட்டிக் கொடுத்து
அவனிடம் கைத்தட்டல் பெறுவான்
தமிழன் ரொம்ப நல்லவன்

தன்மொழி பள்ளி இருக்க பிறமொழி பள்ளிக்குத்
தன் பிள்ளைகளை அனுப்பி அந்த மொழியில்
தன் பிள்ளைகள் பேசுவதைக் கண்டு பூரித்துப் போவான்
தமிழன் ரொம்ப நல்லவன்

தன் தாய்மொழியைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு
பிறர் மொழியில் உரையாடி அந்த மொழி வளர
நீரூற்றி, உரமிட்டுச் செழிப்பாக்குவான்
தமிழன் ரொம்ப நல்லவன்


தன் பண்பாடு இருக்க அடுத்தவன்
பண்பாட்டைப் பின்பற்றி கோட்டு சூட்டு போட்டு
கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவான்
தமிழன் ரொம்ப நல்லவன்

அடுத்த இனத்தான் தன் பெண்ணை விரும்பினால் மறுப்பு
சொல்லாமல் மணமுடித்து வைப்பான், தன் இனத்தான் விரும்பினால்
சாதி பேதம் பார்த்து பிரித்து சாதி காப்பான்
தமிழன் ரொம்ப நல்லவன்

சொந்த இனத்தையே வெட்டிக் கொன்று அழித்து
தன் இனப்பெருக்கத்தைக் குறைத்து மாற்று
இனத்தான் சிறப்பாக வாழ வழி வகுப்பான்
தமிழன் ரொம்ப நல்லவன்

தனக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது
தன்னடக்கத்துடன் உரக்கப் பேசாமல் அமைதி
காத்து விசுவாசம் காட்டுவதில்
தமிழன் ரொம்ப நல்லவன்

மொத்தத்தில் தன் இன,மொழி, பண்பாடு
வளர்ச்சியை விட பிற இன, மொழி பண்பாடு
வளர்ச்சிக்காக மிகவும் பாடுபடுவதில்
தமிழன் ரொம்ப ரொம்ப நல்லவன்

நன்றி:- திருமதி சந்திரா குப்பன் காப்பார்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

தமிழும் இசையும்

பண்பட்ட எல்லா மொழிகளிலும் இசை வாழ்கிறது. ஆனால், எந்த மொழியிலும் இதை முக்கியக் கூறாகச் சொல்வதில்லை; சிறப்பித்தும் போற்றுவதில்லை. ஆனால், தமிழில் மட்டுந்தான் இசைத்தமிழ் என்ற பிரிவே விளங்குகின்றது. சுதி,பாட்டு,பண்,தாளம், பாடுவோர் உள்ளம், கேட்போர் உள்ளம் ஆகியவை இசைந்தால்தான் அதை இசையென்று தமிழர்கள் கூறுவர். அப்படி இல்லையென்றால் அதன் பெயர் “இரைச்சல்” என்றாகிவிடும். இசைக்குப் “புகழ்” என்ற பெயரும் உண்டு என்பதைத் திருவள்ளுவம் இயம்புகின்றது.


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு

எனும் திருக்குறள் இதனை மெய்ப்பிக்கும்.இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் பண்டைய தமிழர்கள் இசையை எந்த அளவுக்குப் போற்றினார்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இறைவனையே இசைமயமாகக் கண்டவர்கள் தமிழ் மக்கள். ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே இறைவன் எனக் குறிப்பிட்டனர். அதனால் தான் இறைவனைப் பன்னிசையால் பாடிப் பரவினர். இம்முறையில் பண்ணோடு கூடிய பத்திப்பாடல்கள் பைந்தமிழில் பல உள்ளன. அவற்றுள் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் முதலியவை குறிப்பிடத் தக்கன.இந்நூல்களில் உள்ள பத்திப் பாடல்கள் தமிழ்த்தேனோடு இசைத்தேனையும் கலந்து சுவைதருவனவாகும்.

தமிழிசை தோன்றிய காலம், தமிழ்மொழி தோன்றிய காலமே! தமிழ் மக்களின் எண்ணம், சொல்,செயல், வாழ்வு அனைத்தும் இசை கலந்தவையாகவே காட்சியளிக்கின்றன. தமிழர் வாழ்வின் பெரும்பங்கை இசையே ஏற்றுள்ளது. குழந்தைப் பருவத்தில் தாலாட்டு, திருமணத்தில் நலுங்குப்பாட்டு, கருப்பக் காலத்தில் வலைக்காப்புப்பாட்டு, இறப்பின் போது ஒப்பாரிப்பாட்டு, என்று தமிழரின் வாழ்வில் இறப்பு முதல் பிறப்பு வரை இசை இடம் பெற்றுள்ளதும் இசையோடு தமிழர்கள்கள் வாழ்ந்தார்கள் என்பதும் தெளிவாகிறது.


இசை,இனிய கலை என்பதால் அது பயிரையும் வளர்க்கும் ஆற்றல் கொண்டது;மேலும் இசை மருந்தாகவும் பயன்படுகிறது.மனிதர்கள் மட்டுமின்றி அஃறிணை உயிர்களுக்கும் இசை பல வழிகளில் துணைபுரிகிறது. மேலைநாட்டுத் தத்துவ மேதையான “சேக்ஸ்பியர்”இசைக்குக் கட்டுபடாதவன் எத்தகைய கொடுஞ்செயலையும் செய்யக் கூடியவன் என்று கூறுகின்றார். இதனால்தான், இசையால் வசமாகாத இதயம் இவ்வையகத்தில் இல்லை என்று தமிழிசைச் சான்றோர்கள் இயம்புகின்றனர்.

நன்றி :- தமிழிசை
எடுத்தாளப்பட்டது

புதன், 12 ஆகஸ்ட், 2009

தாய்மொழியும் தாய்க்குலமும்

தாய் பேசும் மொழியே தம் மகவுக்கு அறிமுகமாகும் முதன்மொழியாகும் . அதுவே, தாய்மொழியாகவும் அமைகின்றது. எனவே, எம்மொழி பயின்றாலும் தாய்மொழியைப் பயிற்றுவிக்க வேண்டியது தாய்மார்களின் தலையாய பொறுப்பாகும். நம் தமிழ்த்தாய்மார்கள், தம் பிள்ளைகளுக்குப் பாலூட்டுவது போலவே தாய்மொழியையும் மறவாது ஊட்டும் மொழிப்பற்றுள்ளவர்களாக இருக்க வேண்டும். அமுதூட்டும் அன்னை, அமிழ்தினினும் இனிய தமிழையும் சேர்த்து ஊட்டவேண்டிய கடமை தாய்க்கு உண்டு. அஃது அவளின் பிறவிப் பெருங்கடன் என்பதை மறுக்கலாகாது.


நாடி நரம்புக்குள் நுழைந்து, குருதியில் கலந்து உணர்வுகளைத் தட்டியெழுப்பும் ஆற்றல் தமிழுக்கு உண்டு! அந்த ஆற்றலைப் பிள்ளைகளின் மனதில் ஆழப்பதியச் செய்யவல்லது இசைத்தமிழாகும். இசைத்தமிழ் நமக்குக் கிடைத்தற்கரிய; அருஞ்சாதனைக்குரிய கலையாகும். இசைக்கு மயங்காத சிசு ஏது? “தமிழே! தேனே! கண்ணே தாலேலோ” என்ற ஆராரோ பாடல் கேட்டு, குழந்தை அயர்ந்து உறங்காதோ? இன்றைய தாய்மார்கள் பலருக்குத் தாலாட்டுப் பாடவே தெரியாது என்கின்றனர். ஏழாவது வயதில் கல்வி கற்க பள்ளி செல்லுமுன் ஏழ்ப்பிறவிக்கும் தொடரக்கூடிய சொந்தமாகத் தாய்மொழியின் அவசியத்தை உணரும் வகை செய்தல் ஈன்றவளின் எண்ணருங்கடமையாகும்.! செம்பவள வாய் திறந்து “அம்மா” என்று மழலை பேசத் தொடங்கும்போதே “மம்மி” என மொழிமாற்றம் செய்வதை ஈனச்செயலெனக் கருத வேண்டும் ஈன்றவள்! பள்ளிச் செல்லத் துவங்கியதும் வேற்று மொழிகள் பேசத் தொடங்கும் பாலகனுக்குத் தாய்மொழியறிவின் அவசியத்தையும் தகைவுடன் உணர்த்த வேண்டும் தாய்குலம்.

தாய்மார்கள் தம் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே ஒளவையை, பாரதியை, வள்ளுவரை, கம்பரை, இளங்கோவை அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும். கூடவே, பாரதிதாசனையும் திரு.வி.க வையும் நினைவுபடுத்தி வைக்க வேண்டும். அவர்தம் தேனூறும் தமிழைச் சுவைக்கச் செய்ய வேண்டும். “தமிழ் எங்கள் தாய்மொழி” என்று பெருமை கொள்ளும் நாம், நமது பிள்ளைச் செல்வங்களும் அத்தகைய பெருமையும் பூரிப்பும் அடையும் வண்ணம் தாய்மொழியின்பால் ஈடுபாடு கொள்ளச் செய்ய வேண்டும்.

சிலர் தமிழில் பேசவே வெட்கப்படுகின்றனர். தமிழ் எங்கள் தாய்மொழி என்ற உணர்வே அவர்களுக்கு ஏற்படுவதில்லை. படிப்பறியாப் பாமர மக்கள், ஏழை எளியவர்கள் போன்றவர்கள் மட்டுமே பேசும் மொழியென தமிழைப் புறக்கணிக்கும் பேதையர்கள் அவர்கள்! இத்தகையொர் நம் மத்தியில் உலாவரக் காரணமாக அமைந்தவை பெற்றோரின் அறியாமையும் வேற்று மொழிமீது கொண்ட மோகமும்தாமே? நஞ்சுக்கும் ஈடான இந்த எண்ண விதைகளைப் பிள்ளைகளின் பிஞ்சு மனதில் தீவிவிட பெற்றோர்களே- அதுவும் தாயே- காரணமாக இருந்துவிடுவது கொடுமையல்லவா? தாயானவள் எவ்வளவுதான் படித்துப் பட்டம் பெற்றுப் பார்புகழ பெரும் பதவியில் வீற்றிருந்தாலும் தன் சேயோடு தமிழ்மொழியில் பேசுவதைப் பழக்கமாகவும் வழக்கமாகவும் கொண்டால்தான் இந்நிலையை மாற்றியமைக்க இயலும்.

கள்ளங்கபடமற்ற பால்போலத் தெளிந்த நெஞ்சுடன் தாயையே தமது உலகமும் வாழ்வுமாக்க் கருதி தாயிடமே அடைக்கலம் புகுபவர்கள் பிள்ளைகள். அவர்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் உருவாக்குவது மட்டுமல்லாது தாய்மொழிப் பற்றுள்ளவர்களாகவும் வளர்த்து ஆளாக்க வேண்டுவது அன்னையர்தம் அரும்பெரும் பணியல்லவா?

நன்றி:-
ந.மகேஸ்வரி
ஆறாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

புத்திலக்கியங்களும் புது படைப்பாளிகளும்

இன்றைய நவீன உலகில் பல புத்தம் புது எழுத்தாளர்கள் பலர் உருவாகி வருகின்றனர். எழுத்துலகில் காலெடுத்து வைத்திருக்கும் அவர்கள் இனி இந்த மொழிக்கும் பிறந்த இந்த இனத்திற்கும் மேற்கொள்ள வேண்டிய பணிகளைச் சுட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இன்றைய எழுத்தாளர்களில் பலர் தாங்கள் என்ன எழுதுகிறோம் என்று தெரியாமல் எதையெதையோ எழுதித் தொலைக்கின்றனர். அதற்குப் பாராட்டும் பரிசும் கிடைக்கின்றது. இலக்கை நோக்கிப் பயணிப்பதுதான் இலக்கியம் . மாறாக எவ்வித இலக்கும் இல்லாமல் மனம் போன போக்கில் எழுதுவது எல்லாம் படைப்புகள் ஆகா. நமது மலேசிய புத்திலக்கியவாதிகள் சிலரின் படைப்பினைத் தங்கள் பார்வைக்குக் கொடுக்கின்றேன். அதில் என்ன பின்நவீனத்துவம் இருக்கின்றது என்பதனை ஆராய வேண்டுகின்றேன். எழுதுவதை யாரும் குறைச்சொல்லவில்லை. ஆனால், என்ன எழுதுகின்றோம், அதனால் ஏற்படும் விளைவுகளையும் நன்கு ஆராந்தறிதல் வேண்டும். எனவே, தான் பாவேந்தர் “இலக்கணமும் இலக்கியமும் தெரியாதான் ஏடெழுதல் கேடு நல்கும் என்றார்.

நமது மொழி மிகத் தொன்மையான மொழி, நமது பண்பாடு மிக உயரிய பண்பாடு. அவற்றையெல்லாம் கட்டிக் காத்து அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கின்ற பொறுப்பு இலக்கிவாணர்களான புத்திலக்கிய வாணர்களுக்கு அதிகம் உண்டு.

ஆனால், எவற்றையெல்லாம் எழுதக்கூடாதோ அவற்றையெல்லாம் எழுதுவதைதான் நாகரீகம், புத்திலக்கியம் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.



காட்டு 1


தூசிகள் படர, அந்த முதல் போஸ்டரில் நின்றிருந்தது ஒரு நிர்வாணப் பெண். சிறு அதிர்வுக்குள்ளிருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த போஸ்டர் கீழே சரிந்து தானாக விரிந்தது, யோனி காட்டியபடி இரு கால்களையும் அகல பரப்பி அமர்ந்திருக்கும் பெண்ணின் படத்தைக் காட்டியது. மயக்கமே வருவது போல ஆகிவிட்டது.


காட்டு 2

மீண்டும் ஒரு வசந்தகாலம் மலரும்
என்கிற செய்தியைக் கொண்டு வந்து
சேர்த்தவன் ஆண்குறியின் வரலாற்று பலவீனம்


இம்மாதிரியான கதைகளும் இலக்கியங்களும் நமது வாழ்க்கைக்கு எவ்வகையில் பயனைத் தருகின்றன. யாரையும் எழுத வேண்டாம் என நாம் கூறவில்லை. ஆனால், நமது பண்பாட்டுக்கு ஒவ்வாத, பண்பாட்டை சீர்குழைக்கின்ற தேவையற்ற சொல்லாடல்களைத் தவிர்தல் நலம் என்கிறோம். படைப்பாளியாக இருப்பவர்கள் மற்றவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டுமே ஒழிய மொழிக்கொலைக்கும் பாலியல் உணர்வுகளையும் தூண்டும் அளவிற்கு எழுதுதல் கூடாது.

நவீன இலக்கியத்திலும் பண்பாட்டையும் மொழியையும் வளர்க்கின்ற பணியினை இவர்கள் முன்னெடுத்தால் சிறப்பு. ஆங்கிலேயருக்கென்று ஒரு பண்பாடு உண்டு, மொழி உண்டு, நாகரீகம் உண்டு. ஆனால், அவற்றை விட உலக இனங்களுக்கே நாகரீகம் கற்றுக் கொடுத்த நமக்கென்று ஒரு தனி பண்பாடும் வரலாறு உண்டு.
எனவே தான் பாரதிதாசன் சொன்னார்

ஏற்றமுறச் செய்வதுவும் மாற்றமுறச் வைப்பதுவும் ஏடே யாகும்.

அதையும் மீறி நாங்கள் எப்படியும் எழுதுவோம் எதை வேண்டுமானாலும் எழுதுவோம் என்று கொக்கரிப்பவர்கள் தலைக்கணத்தோடு இலக்கியம் படைப்பவர்கள் என்று சொல்வதை விட வேறொன்றுமில்லை.

வெறும் பரிசுக்கும் புகழுக்கும் பாராட்டுக்கும் மேடைக்குமாக கதை எழுதுபவர்கள் இவர்கள் என்றால் முற்றிலும் தகும். மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவிட்டு அதில் மலிவு விளம்பரத்தை தேடிக்கொண்டு பிழைப்பு நடத்துபவர்கள் இவர்கள். தற்கால நடப்புகளையும் நிகழ்கால நிதர்சனங்களையும் இலக்கியமாகப் பதிவாக்குகிறோம் என்று கொக்கரிக்கும் இவர்களுக்கு எழுதுவதற்குக் கிடைத்திருப்பதும் கண்ணுக்குத் தெரிவதும் வெறும் பாலியல் சம்பந்தப்பட்ட விசயங்கள் தான்.

பாவம் இவர்களைக் குற்றம் சொல்லி என்ன இருக்கிறது. விடலைப் பயல்கள் பாலியலை விட்டால் வேறு எதை அறிவார்கள்? பொடியள்களுக்கு இப்போதைக்குப் பாலியல் பரவசத்தை விட்டால் வேறு எதற்கு அலைவார்கள்? என்று நாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. இளமை வேகத்தில் காட்டாற்று வெள்ளமாக கண்மண் தெரியாமல் தலைதெறிக்க ஓடும் இவர்களின் தலையில் குட்டுவைத்து சரியான வழியைக் காட்டுவது சமுதாயப் பொறுப்புணர்வும் மொழிக் காப்புணர்வும் உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.

ஆகவே, புத்திலக்கியவாணர் அன்பர்களே, இதனைச் சற்று சிந்தியுங்கள்.

நாயும் வயிற்றை வளர்க்கும்;
வாய்ச்சோற்றைப் பெரிதென்று நாடலாமோ?

போய் உங்கள் செந்தமிழின்
பெருமையினைப் புதைப்பீரோ?

எம்தமிழை அறிவீரோ??
தமிழறிவும் உள்ளதுவோ
உங்கட் கெல்லாம் ?

வெளியினில் சொல்வதெனில்
உம்நிலை வெட்கக்கேடன்றோ ? நீவீர்

கிளி போலச் சொல்வதன்றித்
தமிழ் நூல்கள் ஆராய்ந்து
கிழித்திட்டீரோ.

திங்கள், 6 ஜூலை, 2009

ஊசல் என்னும் ஊசலாட்டம்

பழங்காலத் தமிழர்கள் தங்கள் உடலை வளர்க்கும் பண்பாட்டில் அதிக கவனம் செலுத்தியுருக்கின்றனர். உடலைச் சிறந்த முறையில் பேணுத அறம் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் உடல் திறனும் தேடிய செல்வமும் அழியும் என்று நம்பியிருக்கின்றனர். எனவே, பழந்தமிழர்கள் தங்கள் இளைய பருவத்தினரைத் விளையாட்டில் ஈடுபாடு கொள்ளச் செய்து அவர்களின் உடல் வளத்தைப் பெருக்குவதில் நாட்டம் கொண்டனர்.அக்கால மக்கள் தாங்கள் வாழ்ந்த திணைக்கேற்ப விளையாட்டுகளை உருவாக்கிக்கொண்டனர்.


ஊசல் என்னும் ஊசலாட்டம் இன்று ஊஞ்சல் எனப்படுகின்றது. மரக்கிளைகளில் அல்லது வீடுகளில் உயர்விட்டங்களில் கயிறுகளால், கொடிகளின் தண்டுகளால் ஊஞ்சல் கட்டி அதில் அமர்ந்து ஆடி மகிழ்தல் ஆகும். இதில் பெரும்பாலும் பெண்களே பங்கேற்பர். சங்க இலக்கியங்களில் தலைவியை ஊஞ்சலில் வைத்து ஆடியவாறு பாடியதாகக் குறிப்புகள் உள்ளன. நற்றினை எனும் நூலில்



“பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்”

என்ற வரிகள் வெளிப்படுகின்ற “மடவோர்க்கியற்றிய மாமணி யூசல்” என்று சொல்லப்படுகின்றது. முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்த ஊஞ்சல் விளையாட்டு இன்று குறைந்து விட்டது. ஆனால், மேற்கு நாடுகளில் பொதுப்பூங்காதோறும் ஊஞ்சல்கள் அமைத்து ஊஞ்சலாடுவது இன்று வழக்கமாகிவிட்டது.


நன்றி:- வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்






புதன், 27 மே, 2009

தமிழின வீர வேங்கையும் தமிழர் நிலையும்

உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் மாவீரன் பிரபாகரன் அவர்கள். அம்மாபெரும் தலைவனை அழித்துவிட்டதாகக் கொக்கரிக்கின்றது சிங்களப் பேரினவாத அரசு. உலக வல்லரசு நாடுகளின் ஆதரவுடன் தமிழினத்தைக் வெற்றிகரமாக கொன்று குவித்திருக்கின்றது. சிங்கள அரசு விடுதலைப்புலிகளை அழித்துவிட்டதாக மார்தட்டிக் கொள்ளலாம். ஆனால் உலகத் தமிழர்களின் உள்ளத்தில் வேறூன்றிக் கிடக்கின்ற விடுதலைத் தீயை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.
இவற்றுக்கிடையில், உலகத்தமிழர்கள் இனி அடுத்தக் கட்ட போராட்டத்திற்குத் தயாராகுதல் வேண்டும். உலக தமிழின வரலாற்றில் என்று அழியாத புகழைச் சேர்த்திருப்பவர் மாவீரர் பிரபாகரன் அவர்கள். தமிழீழம் மலராமல் தலைவர் அவர்கள் ஒருபோதும் மரணத்தை சந்தித்திக்கமாட்டார் என்பது மட்டும் உறுதி. நம்புங்கள் நமது தலைவர் மரணத்தை வென்று மக்கள் மனங்களில் நிற்பவர்.
உலகத் தமிழின விடுதலைக்காகத் தன்னையே ஒப்படைத்துப் போராடிக்கொண்டிருக்கின்ற இனியும் போராடும் உண்மைத் தமிழ் வேங்கைக்கு மரணமேது. மாறாக ஒவ்வொரு தமிழின் உள்ளத்திலும் உணர்விலும் நிச்சயம் வீறு கொண்டு எழுவார். வெகு விரைவில் நமது வீர வேங்கைகள் தமிழீழத்தை வென்றெடுப்பர். அதற்கு உலகத் தமிழர்களாகிய நாம் நம்முடைய ஆதரவினையும் கடமையையும் நிச்சயம் செய்திடல் வேண்டும். இது வெறுமனே நடக்கின்ற போராட்டமல்ல , மாறாக ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் உண்மைப் போராட்டம். உலக வரலாற்றில் 49 நாடுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த வரலாறு உலகறிந்த உண்மை. ஆனால், இன்று ஒரு பிடி மண் கூடத் தமிழனுக்குச் சொந்தமில்லை என்று நினைக்கும் பொழுது நெஞ்சு பதைக்கிறது. உள்ளம் வெம்முகிறது.
நமது தொப்புள் கொடி உறவுகளைக் கொன்றொழிக்கும் சிங்களப் பேரினவாத அரசுக்குத் துணைபோகும் இந்திய நாட்டுக்கும் உலக வல்லரசு நாடுகளுக்கும் சரியான பாடம் புகட்டிடல் வேண்டும். அதற்கு முகாமையாக நாம் நம்மை இந்திய மேலாதிக்கச் சிந்தனையிலிருந்து முற்றிலுமாக விடுவித்துக் கொள்ளல் வேண்டும். ஆகவே, தமிழர்களாகிய நாம் இனியும் நம்மை மறந்தும் இந்தியன் என்று அழைத்திடல் கூடாது. அதுவே நாம் இதுவரையில் தமிழீழ விடுதலைச் சமரில் வீரச்சாவடைந்திருக்கின்ற வீர வேங்கைகளுக்குச் செய்கின்ற உண்மை வணக்கமாகும். இதுவரையில் சாதிகளாலும் மதங்களாலும் இன்னபிற தாக்குரவுகளாலும் சிக்குண்டு சின்னாப்பின்னமாகி இருக்கின்ற நாம் இனி தமிழர், தமிழினம் என்ற சிந்தனைக்குள் வருதல் வேண்டும். அதுவே நமது அடுத்தக்கட்டப் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் ஆயுதமாகத் திகழும். அடுத்தவனுக்காகச் சிந்தித்த்து போதும். இனி நம்முடைய சிந்தனையும் குறிக்கோளும் ஒன்றாக வேண்டும். தமிழா ஒன்றுபடு, தமிழால் ஒன்றுபடு தமிழுக்காகவே ஒன்றுபடுதல் வேண்டும்.
எனவே, இற்றைய சூழலில் தலைவரின் மரணம் தொடர்பான செய்திகளை நம்புவதை விட்டுவிட்டு இனி அடுத்த கட்ட நடவடிக்கைகளைச் சிந்திப்பதுவே நமது முதல் வேலையாக இருத்தல் வேண்டும். உலகத் தமிழர்களின் உள்ளத்திலும் உணர்வுகளிலும் உயிரிலும் கலந்திருக்கின்ற உண்மைத் தமிழ்மகன் விரைவில் வருவார் என நம்பிக்கையோடு காத்திருப்போம். விடிகின்ற நாளைய பொழுது நம்பிக்கை பொழுதாக, மலர எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோம்.




ஒற்றைத் தமிழ்மகன் இங்கு உள்ளவரை
உள்ளத்தே அற்றைத் தமிழ்த்தாய் இங்கு ஆட்சி புரியும் வரை

எற்றைக்கும் எந்நிலையிலும் எந்த நிலையினிலும்
மற்றை இனத்தார்க்கே மண்டியிடான்


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

திங்கள், 11 மே, 2009

சிலம்பாட்டம்

தமிழரின் பழமை வாய்ந்த விளையாட்டுகளில் பல்லோராலும் பரவலாக அறியப்பட்டிருக்கின்ற விளையாட்டு சிலம்ப விளையாட்டாகும். இவ்விளையாட்டானது ஆண்களுக்கு உரிய விளையாட்டாகும். இவ்விளையாட்டு பரத நாட்டியத்தோடு ஒத்துபோகிறது என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். பழங்காலத்தில் மலைவாழ் மக்கள் விலங்குகளை வேட்டையாடவும், கொடுவிலங்குகளின் தாக்குதலை எதிர்கொள்ளவும் கம்புகளைக் கருவியாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். இதுவே, பின்னர் சிலம்பக் கலையாக வளர்ச்சிப் பெற்று வந்திருக்கின்றது.

சிலம்பம் தற்காப்புக் கலையாக இருப்பினும், பெரும்பாலும் தமிழர் திருவிழாக்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் மக்கள் கண்டுகளிக்கும் வீர விளையாட்டாக அரங்கேறுகின்றது. சிலம்பம் ஆட கட்டாயம் கம்பு வேண்டும். இதற்கு மூங்கிற் கழி பயன்படுகின்றது.

மூவேந்தர்கள் முதற்சங்க காலந்தொட்டே சிலம்பக் கலையை போற்றி பேணி வளர்த்து வந்துள்ளனர் என்பது வரலாற்று உண்மையாகும். திருவிளையாடற் புராணத்திலும் வைத்திய நூலான “பதார்த்த குணசிந்தாமணியிலும்” சிலம்பாட்டம் இருந்ததற்கான குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. சிலம்பப் பயிற்சி ஒருவரின் நோயைத் தீர்த்து ஒருவரின் உடலையும் வலுப்படுத்திக் கொள்ள வழிவகுக்கின்றது.

சிலம்பாட்டம் என்பது வெறுமனே கம்பை மட்டும் வைத்து விளையாடும் விளையாட்டல்ல. மாறாக ஈட்டி, சுருள்வால், கட்டாரி, சங்கிலி, மான்கொம்பு போன்றவற்றை வைத்து விளையாடும் விளையாட்டாகும். முற்காலத்தில் போர்ச்சிலம்பம் இருந்திருக்கின்றது. அதனைப் போருக்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கின்றனர். திருவிழாக் காலங்களிலும் முக்கிய நிகழ்வுகளிலும் கம்பைப் பலவிதமாகச் சுழற்றும் விளையாட்டு தீச்சிலம்பம் என்று சொல்லப்படுகின்றது. தமிழரின் விளையாட்டே இன்று “கராத்தே, குங்பூ, தேக்கோவா என உறுமாறி பிற நாடுகளில் வளர்ச்சிப் பெற்றுள்ளது. இவ்விளையாட்டுப் போட்டியின் போது, விளையாட்டாளர் எதிரியின் கம்பு தன் உடலில் படாதவாறு தடுக்கவும், தன் கம்பால் எதிரியின் உடலின் பல்வேறு இலக்குகளைத் தொடவும், எதிரியின் கம்பைத் தட்டிவிட்டு வெறுங்கையராக்கவும் முற்படுவர். ஏனெனில், எதிரியின் கம்பு பறி போய்விட்டால் அது வெற்றியாகக் கொள்ளப்பட்டு ஆட்டம் நிறைவுறும்.

தமிழரின் வீர விளையாட்டான சிலம்பக் கலையை தமிழர்கள் போற்றிப் புரந்துக்கொள்ளாதக் காரணத்தினால், இக்கலை இன்று அருகி வரும் கலைகளில் ஒன்றாக விளங்குகின்றது. உலகத்தமிழர்கள் தனித்தன்மையுடன் கூடிய தமிழர் விளையாட்டுகளை முன்னெடுத்துச் செல்ல ஆவணச் செய்ய வேண்டும். தமிழால் முடிந்தால் தமிழரால் முடியும்.

வியாழன், 30 ஏப்ரல், 2009

ஏறு தழுவுதல்

தமிழர்களுக்கென்று தனித்துவமான விளையாட்டுகள் இருந்தன என்பது இன்று மெல்ல-மெல்ல மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டு வருகின்றது. தமிழர்களுக்கென்று விளையாட்டுகள் இல்லை என்ற எண்ணக்கூடிய காலம் உருவாகியுள்ளது வருந்தற்தக்க செய்தியாகும்.அவ்வகையில் தமிழர்களால் மறக்கப்பட்டு வருகின்ற தமிழர் விளையாட்டுகளை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பழந்தமிழர்கள் வாழ்வில் பல்வேறு விளையாட்டுகள் இடம் பெற்று வந்துள்ளன. அவ்வகையில் தமிழ்நாட்டுப்புற மக்களால் இன்றளவும் பேணி போற்றப்பட்டு விளையாடிவரும் விளையாட்டு சல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவுதலாகும். மாடி வாசலில் முரட்டுக் காளையினைத் தனித்து நின்று அடக்குதல் இவ்விளையாட்டின் நோக்கமாகும்.


இலக்கியங்களில் சுட்டப்படும் சல்லிக்கட்டும் ஏறுதழுவுதலும் ஒன்றே. ஆனால், மேனாட்டுக் காளைப் போர் சண்டையும் நம் பழந்தமிழரின் சல்லிக்கட்டையும் இணைத்துப் பார்த்தல் கூடாது. ஏனெனில், காளைப்போர் சண்டையின் இறுதியில் காளைகள் கொல்லப்படுகின்றன. ஆனால், காளைகளை அடக்குதல் என்ற செய்கை மட்டுமே இவ்விளையாட்டில் இடம்பெறுவதால் ஏறு தழுவுதலைத் தமிழருக்கே உரிய விளையாட்டாகக் கொள்ளலாம்.

ஏறு தழுவுதல் என்பது மிகுந்த துணிச்சலும் திறமையும் நிறைந்த விளையாட்டாக இன்றளவும் கருதப்படுகின்றது. இவ்விளையாட்டில் வீரமும் திறமும் கொண்ட இளைஞர்கள் பங்கெடுத்துக் கொள்வர். சங்ககாலத்தில் மஞ்சுவிரட்டு(காளைகளைப் பொது வீதியில் ஓடவிட்டு அவற்றை விரட்டுவது) மற்றும் எருது கட்டுதல்(காளைகளைக் கயிற்றால் கட்டி அடக்குதல்) எனும் விளையாட்டுகள் நடைப்பெற்றன எனக் கூறுகின்றனர். பின்னாளில் தமிழகத்தில் ஜமீன்தார்கள் தங்கள் பலத்தை உறுதிப்படுத்த பலமுள்ள முரட்டுக் காளைகளை வளர்த்தார்கள் என்ற தகவலும் உண்டு. ஆனால், அக்காளைகளை யாரும் அடக்கி வென்றுவிட்டால் தங்கள் மதிப்பினை இழந்து விடுவோம் என்று பயந்து சல்லிக்கட்டு போட்டிகள் எதையும் வைக்கவில்லை என்பது அறிஞர்களின் கருத்தாகும்.

சங்ககாலத்தில் மஞ்சுவிரட்டு நடைப்பெற்றது என்ற கருத்தை வலியுறுத்த நீலகிரிப்பகுதியில் கரிக்கியூர் என்ற ஊரில் உள்ள கற்பாறை ஓவியங்களை ஆதாரமாகக் காட்டுகின்றனர். அவ்வோவியங்கள் மூவாயிரம் வருடங்களுக்கு மேல் பழமையானது என்பது அறிஞர் பெருமக்கள் முடிந்த முடிபாகும்.



வியாழன், 26 மார்ச், 2009

மகளிர் விளையாடல் கலை



பழந்தமிழிலக்கியங்களில் அம்மாணை, பந்து, சாழல், ஈசல் போன்ற விளையாட்டுகளைப் பற்றிய குறிப்புகளைக் காணலாம். இவை மகளிர்கே உரிய விளையாட்டுகள். பண்டையத் தமிழர்கள் ஆடவர்க் கென்றும் மகளிர்க்கென்றும், சிறுவர்களுக்கென்றும் முதியோர்களுக்கென்றும் இருபாலருக்கும் உரியதென்றும் பல்வகை விளையாடல்களைப் பகுத்து வைத்திருந்தனர். பெரும்பான்மையான விளையாட்டுகள் பெண்களுக்குரியவனவாகவே காணப்பெறுகின்றன. அவை இயற்கையோடு இயைந்தவனவாயும் அமைந்துள்ளன.

ஆடிப்பாடிக் கொண்டே குறி சொல்லும் வழக்கம் தொன்று தொட்டு தொடர்ந்து வரும் ஒரு கலை. இதனை வெறியாட்டு என்பர். இந்த வெறியாட்டு மகளிரை அணங்குறு மகளிர்(குறிஞ்சி:175).கானவர் வியப்ப... நடுவூர் மன்றத்தடி பெயர்த்தாடி’ (சிலம்பு:வேட்டுவரி) என்பர்.

செம்மூதாயாட்டு என்பது ஒரு வகை விளையாட்டு. செம்மூதாய் என்பது தம்பலப்பூச்சி ஆகும். மழைபெய்து ஓய்ந்த பின் தரையில் ஓடித்திரிவது இது. இன்று இதனைப் பட்டுப்பூச்சி என்று அழைக்கின்றனர். இப்பூச்சிகளின் பின்னால் சென்று அவற்றின் அழகினையும் போக்கினையும் கவனித்து அவற்றைத் தேடிப்பிடித்து குவித்து வைத்து விளையாடும் மகளிர் விளையாட்டு இது.




வண்டு ஓட்டுதல் இன்னொரு விளையாட்டு. வண்டுகள் பின் ஓடி எந்தப் பூவில் அதிகமாய் அவை மொய்க்கின்றன என அறிந்து, அந்தப் பூவில் தேன் மிகுந்திருக்கும் என்பதை அறிவர். அந்த வண்டுகளை விரட்டிவிட்டுப் பூந்தேனைச் சுவைப்பது இவ்விளையாட்டு. தொண்ணூற்றொன்பது வகையான வண்ண மலர்களைத் தேடிக் கொய்து தலைவியும் தோழியரும் அவற்றைச் சூடி ஆடி மகிழும் விளையாட்டைப்பற்றி புலவர் கபிலர் தம் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடுகின்றார். இதனைப் போதாட்டு என்பர்.



‘இந்திரையோ, இவள் சுந்தரியோ,
தெய்வரம்பையோ, மோகினியோ
மனமுந்தியதோ, வழி முந்தியதோ, கரம் முந்தியதோ
எனவே, உயர் சந்திர சுடர் குறும்பல வீசுரர் சங்கணி வீதியிலே மணிப்
பைந்தொடி நாரி வசந்தடுவாய் யாரி பொற்
பந்து கொண்டாடினனே


(குற்றாலக்குறவஞ்சி)

இவற்றோடு அலவனாட்டு(நீர்க்கரையில் நீண்டினை விரட்டிப் பிடித்தாடும் ஆட்டம்) களி கொய்யு(மாலைப்பொழுதில் மொட்டுகளைக் கொய்து பல வடிவங்களில் கோத்து ஆடுதல்- அத்தியம் போது ஆடும் களிக்கொய்யு’
(அடியார்க்கு நல்லார் உரை)




வருதிரை உதைத்தல்(கடற்கரையில் எழும் அலைகளை எதிர்த்து காலால் உதைத்து விளையாடல்) வண்டலயர்தல் ( மணலைக் குவித்து, பாவை செய்து விளையாடல்)கிலிகிலி (கிளர்ப்பூட்புதல்வரோடு கிலிகிலியாடுதல்- சிறுபாணாற்றுப்படை) இவற்றோடு துணங்கைக் கூத்து( ஆடவர் கைகொடுக்க ஆடுதல்) குரவைக் கூத்து, புனல் ஆடுதல் போன்றவை எல்லாம் தமிழ்ப்பெண்கள் ஆடும் ஆட்டங்களாகும். கோலமிடுதல், கும்மியடித்தல், பூப்பந்தாடல், கோலாட்டம் முதலானவை இன்றும் பெருவழக்கிலுள்ள மகளிர் ஆட்டக் கலைகளாகும்.


  • நன்றி : உமா பதிப்பகம்




சனி, 21 பிப்ரவரி, 2009

போர்க்கலை

மக்களைக் காத்தல் மன்னர்க்குக் கடன். உள்நாட்டுக் கலவரம் முதல் வெளிநாட்டு படையெடுப்பு வரை தம் குடிமக்கள் எதிலும் பாதிப்படையா வண்ணம் பாதுகாக்கும் பொறுப்பை நாடாள்வார் ஏற்க வேண்டும். மண், பெண், பொன் என எக்காரணத்தாலும் போர் எழலாம். அதனைத் தடுக்கவும் தொடுக்கவும் அரசுக்குப் படைபலம் வேண்டும்.

போரினால் உயிர், உடைமை இழப்பு மிகும்; அழிவும் மிகும். தமிழ்ச்சான்றோர் இவற்றை எல்லாம் எண்ணி வருந்தி, போர் இன்றியமையாதவிடத்தும், அது அறத்தின் அடிப்படையிலேயே இருத்தல் வேண்டும் எனச் சில நெறிமுறைகளை வகுத்தனர்.பகை நாட்டின் மீது படையெடுக்கும் முன், அந்நாட்டு அறவோரையும் தன்னாட்டு அறவோரையும் அல்லலின்றி பாதுகாப்பது அரசனின் முதற்கடமை என முறை செய்தனர். அத்தோடு பசு, பசுவின் இயல்புடைய அந்தணர், மகளிர், நோயுற்றோர், சிறார்கள், தம்முன்னோர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்ய வல்ல புதல்வரைப் பெற்றிராதோர் ஆகிய அனைவரையும் பாதுகாப்பு நாடி வேற்றிடத்துக்கு செல்வித்தல் வேண்டும்.


இதனை முரசறைந்து தெரிவித்தல் வேண்டும். போர் தொடங்கும் முன் தன் படைவீரர்களை ஏவி எதிரி நாட்டுப் பசுக்களைக் கவர்ந்து வர வேண்டும். அப்பொழுது தம் பசுக்களை மீட்க அவற்றுக்கு உரியவர் வருவர். பசுக்களைக் கவர்தல் “கரந்தை” என்றும் அப்பசுக்களை மீட்டல் “வெட்சி” என்றும் சொல்லப்படும். போரைத் தொடங்கிய மன்னன் பகைவன் நாட்டை எதிர்நின்று தாக்குதலை “வஞ்சி” என்பர். பகைவன் நாடு புறமதிலை முற்றுகை இடலும் முற்றுகையிடப்பட்ட தன் மதிலைக் காத்தலும் “உழிஞை” எனப்படும். இரு மன்னரும் களமிறங்கிக் கடும்போர் புரிதலைக் “தும்பை” என்பர். இதில் வெற்றி பெறுதல் “வாகை” எனப்படும். இவை அனைத்டும் பூக்களின் பெயர்களே! மன்னரும் போர் மறவரும் அப்பூக்களை அணிந்தே போரிடுவர். தேர்ப்படை, யானைப்படை, குதிரைபடை, காலாள்படை என நால்வகைப் படைகளையும் போரில் ஈடுபடுத்துவர்.

போரிடும் வீரர்கள் கண்ணிமைத்தல், புறமுதுகிடுதல் கூடாது. அப்படிச் செய்தவர்களுடன் போரிடவோ போர்க் கருவிகளை எய்தலோ கூடாது. தளர்ந்து விழுந்தவனை, பின் வாங்கியவனை, படைக்கலம் இழந்தோனை, ஒத்த கருவி எடாதோனை கொல்லலாகாது. போர் வீரன் வீரனோடும், தலைவன் தலைவனோடும் போரிடுதல் வெண்டும். பொழுது சாய்ந்த பின் போர் தொடரலாகாது; தத்தம் பாசறைக்குச் சென்றுவிடல் வேண்டும்.

போரில் வென்ற மன்னன், வெற்றிக்கொடி எடுத்து விழாக் கொண்டாடுதல் மரபு. அவ்விழாவில் விழுப்புண்பட்டு மடிந்த வீரர்களுக்கும் விழுப்புண்ணுடன் வெற்றிகொண்டு தன்னுடன் மீண்ட வீர்ர்களுக்கும் முறைப்படி சிறப்புச் செய்து பொருள் குவியல்களைக் கொடுத்தலும் பட்டமளித்துப் பாராட்டலும் மரபு. போர்க்களத்தில் விழுப்புண்பட்டு மடிந்த மறவர்களுக்கு, சிறந்த கல் எடுத்து, அதை நன்னீராட்டி, அவ்வீரனின் படிமம் சமைத்து, அதனடியில் அம்மறவனின் புகழையும் பெயரையும் வெற்றியையும் பொறித்து விழாக் கொண்டாடுதலைக் கல்நாட்டல் என்பர். அக்கல்லைத் தெய்வமாக்கிப் படையலிடுதலும் வழக்கமாயின.



தமிழனின் போர்க்கலை அறத்தை அடிப்படையாக்க் கொண்ட ஓர் அருங்கலை
  • நன்றி:- உமா பதிப்பகம்

இசைக்கலை

பண்டையத் தமிழர் தம் மொழியை இயல், இசை,நாடகம் என மூவகைப்படுத்தி வளர்த்தனர். எனவே, தமிழ், முத்தமிழ் ஆயிற்று. முத்தமிழுள் இசைத்தமிழ் ஒன்று. இசைத்தமிழ் ஒரு கலையாய்-நுண்கலையாய் இசைக்கலையாய் வளர்ந்தது.

இசைக் கலை ஒலியின் அடிப்படையில் அமையும் கலை; செவி வழி துய்க்கும் கலை. குழல் இசை, பாடல் இசை போன்றவை இனியவை என்றும், பூனை கத்தல், காக்கை கரைதல் போன்றவை சாதாரணமானவை என்றும், புலியின் உறுமல், இடியின் ஓசை போன்றவை கடுமையானவை எனவும் ஒலியை மூவகைப்படுத்துவர். இனிய ஒலிகள் தனித்து இனிப்பவை;இணைந்து இனிப்பவை என இருவகைப்படும். தனித்து ஒருவர் பாடுதல், குழல் மட்டும் இசைத்தல் போன்றவை தனித்து இனிப்பவை. குரல், குழல், யாழ், முழவு, தாளம் ஆகியவை கூட்டாய்ச் சேர்ந்து இசைத்தல் இணைந்து இனிப்பானவை.

இனிய ஒலி செவி வழி புகுந்து, இதய நாடிகளைத் தழுவி உயிரினங்களை இசையவும் பொருந்தவும் வைக்கின்ற பொழுது, அது இசை எனும் பெயரைப் பெறுகின்றது. இசை எனும் சொல் இயைவிப்பது-பொருந்தச் செய்வது, தன்வயப்படுத்துவது எனப் பொருள்படும். இசை கல் மனத்தையும் கரைந்துருகச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது. கற்றோரும் மற்றோரும் இசை வயப்பட்டு நிற்பர். அன்பைப் பெருக்கி ஆருயிரை வளர்ப்பது இசை. இசை நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. பயிர் வளர்ந்து நிறைந்த பயன் விளையவும், பசு மிகுந்த பால் சுரக்கவும் தூண்டும் அது. இசை உயிரினங்கள் அனைத்தையும் தன்பால் ஈர்த்து உய்விக்கும் தன்மையைப் பெற்றது.

பண்டைய தமிழர் வளர்த்த நுண்கலைகளுள் இசைக்கலை முதன்மையானது; தலை சிறந்தது. முற்காலத்தில் இசைத்தமிழ் நூல்கள் பல இருந்தன. பரிபாடல், முதுநாரை, முதுகுருகு போன்றவை குறிப்பிடத்தக்கவனவையாகும். முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் பல்வகைப் பண்கள், இசைக்கருவிகள், இசைக்கலைஞர்கள் தொடர்பான செய்திகளைச் சொல்கின்றது.


தொல்காப்பியர் நிலத்தை நான்கு வகையாகப் பிரித்து அவற்றுக்குரிய கருபொருளைக் கூறும் பொழுது, யாழும் யாழின் பகுதியும் பற்றிக் குறித்துள்ளார். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார், பதிக உரையில் ஐந்து நிலங்களுக்கும் அவற்றுக்குரிய ஐந்து பெரும்பண்களையும் சுட்டி விரித்துள்ளார். இவை தமிழிசையின் தொன்மையைத் தெள்ளத் தெளிவாய் விளக்குகின்றன.இளங்கோவடிகள் முல்லை யாழ், குறிஞ்சி யாழ், மருத யாழ், எனும் பெரும்பண்களுக்குரிய ஏழ் நரம்புகளைப் பல்வேறு காதைகளில் குறிப்பிட்டு விளக்கியுள்ளார். தமிழர் வளர்த்த மற்றெந்த கலைகளைக் காட்டிலும் இசைக்கலையே மரபு மாறாது தொடர்ந்தும் வழிவழியாக வளர்ந்து வரும் நுண்னிய அருங்கலையாகும்

  • நன்றி: உமா பதிப்பகம்






சனி, 14 பிப்ரவரி, 2009

சிற்பக்கலை


மனிதன் படைத்த கலைகளுள் மிகச் சிறந்த்து சிற்பக்கலை என்பர். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இக்கலை வளர்ந்து வருகின்றது. மனித நாகரீகத்தையும் அதன் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் சிற்பக்கலையைவிட சிறந்தது வேறொன்றில்லை. நாடுகளின் தொன்மை வரலாற்றை அம்மக்கள் வளர்த்த சிற்பக்கலை வழியாகவே பெரிதும் அறிய முடிகின்றது.

கண்ணால் கண்ட உருவங்களையோ கற்பனை உருவங்களையோ வடிவமைத்துச் செய்வது சிற்பம் எனப்படும். அதனை வடிபவன் சிற்பி எனப்படுவான். கல், உலோகம், செங்கல், மரம், சுதை, தந்தம், வண்ணம், கண்டசருக்கரை, மெழுகு என்பன சிற்பம் வடிக்க ஏற்றவை என பிங்கல நிகண்டு கூறும். கல்லில், கருங்கல், மாக்கல், பளிங்குக்கல், சலவைக்கல் என்பனவும் உலோகங்களில் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பும் ஏற்றனவாகக் கருதப்பட்டன.


வடிவம் முழுவதையும்-முன்புறம் பின்புறம் இரண்டையும்-காட்டும் சிற்பங்களை “முழுவடிவச் சிற்பங்கள்” என்றும் வடிவத்தின் ஒருபுறம் மட்டும் காட்டும் சிற்பங்களைச் “புடைப்புச் சிற்பங்கள்” என்றும் வகைப்படுத்துவர். கோயில்களில் காணப்படும் முதன்மைத் தெய்வத் திருமேனிகளும் உற்சவச் திருமேனிகளும் முழுவடிவச் சிற்பங்கள் ஆகும்.


தமிழ்நாட்டுச் சிற்பங்களின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலை இலக்கணங்கள் அவற்றில் அளவாய் அமைந்துள்ள நிலையாகும். இவ்விரு கலைகளுமே கோயில்களால் வளர்க்கப்பட்டமையால், இவை எளிதாக கைவரப்பெற்றன. சிற்ப வடிவங்கள் நின்றாலும் அமர்ந்தாலும் கிடந்தாலும் வேறெந்த அமைதியில் தோன்றினாலும், அவை பெரும்பாலும் ஆடற்கலை இலக்கணத்தையொட்டி அமைந்திருப்பதைக் காணலாம். சிற்பிகள் ஆடற்கலை இலக்கணத்தை நன்கறிந்து தம் கலைஉணர்வு, கற்பனைத் திறன் கலந்து அமைப்பதால், தெய்வத் திருமேனிகள் நிறுவப்படும் இடத்துக்குத் தக்கவாறு கலையழகை மட்டுமன்றி அவ்வடிவ அமைப்புகளின் உட்கருத்தையும் உணர்த்தும் வகையில் உள்ளன.

தமிழகத்தில் பல்லவர்களின் மாமல்லக் குகைக் கோயில் சிற்பங்கள் வரலாற்றுப் புகழ் பெற்றவை. பாண்டியர் கால சிற்பங்களும் தமிழகச் சிற்பங்களின் கலைத்திறனுக்குச் சான்றாய் விளங்குகின்றன. தமிழகத்தில் சோழர்காலக் குடந்தை நாகேசுவரர் கோயில், தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழீச்சுரம், தராசுரத்து ஐராவதேசுவரர் திருக்கோயில் ஆகியவற்றிலுள்ள சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவை சிற்பக் கலை வளர்ச்சியையும், அக்கலையில் தமிழகச் சிற்பிகள் பெற்றிருந்த பெருந்திறனையும் உலகுக்கு உணர்த்துவன.


இரண்டாம் இராசராசனின் கலைப்படைப்பாய் எழுந்த ஐராவதேசுவரர் திருக்கோயில், சிற்பக்கலைச் சாதனைகளின் உச்சம் என்பர். அழகிலும் நுணுக்கத்திலும் ஆற்றலிலும் மிக உன்னத நிலையிலிருந்தே இச்சிற்பக் கலையின் எச்சமாக கம்போடியாவின் ‘அங்கோர் வாட்’ கோயில்களிலும் நம் நாட்டு ‘லெம்பா பந்தாய்’ பள்ளத்தாக்கிலும் சிதைவுற்றிருக்கும் சிற்பங்களே சீரிய எடுத்துக்காட்டுகள்.
  • நன்றி:- உமா பதிப்பகம்

சனி, 7 பிப்ரவரி, 2009

எத்தனை நாளைக்கு ?

தமிழீழ வரலாற்றுச் சமரில் இன்றுவரை எமது தமிழின விடுதலைக்காக இன்னுயிரை ஈந்திருக்கின்ற வீர வேங்கைகளுக்கு எமது வீர வணக்கங்கள்

ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்கும் முயற்சிக்கு பேருதவியாக இருந்துவரும் இந்திய நடுவணரசு இலங்கைக்கு அனுப்பும் இராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்தல் வேண்டும். எனவே, உலகத் தமிழர்கள் அனைவரும் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஈழத்தில் அல்லலுரும் நம் தொப்புள் கொடி உறவுகளுக்குத் தோள் கொடுப்போம். விரைவில் தமிழீழம் மலர இறைஞ்சுவோம்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்









எத்தனை நாளைக்குச்
சொல்லுவாய் ?
இராசிவ் கொலையையே
குதப்பிநீ மெல்லுவாய்......
(எத்தனை)

கொத்துக் கொத்தாய் அங்கு
மக்கள் மடியவும்
கூக்குர லோட
பொழுது விடியவும்
மொத்தமாய் எம்இன
முளைகிள்ளப் பார்த்தும்
மூடனே..... காங்கிரசு
முட்டாளே நீ இன்னும்
(எத்தனை)

மலையரண் போல
மக்களைக் காத்தும்
மாப்பகையை அவர்
சாய்ப்பது பார்த்தும்
புலிபுலி என்றே
புழுதி கிளப்பிடும்
புண்ணாக்கே காங்கிரசுப்
புல்லனே .... நீ இன்னும் .......
(எத்தனை)

அமைதிப்படை செய்த
அழும்பில் எரிந்தும்
அக்காள் தங்கைகள்
அடியோடு சிதைந்தும்
குமைவோரின் பற்றுக்
கோடான புலிகளைக்
கோட்டானே...... காங்கிரசுக்
குக்கலே ...... நீ இன்னும்......
(எத்தனை)

"அன்னையே" தனது
அழுகையை நிறுத்தியும்
அவர்மகள் தன் துயர்
ஆற்றுப் படுத்தியும்
அண்ணணா .... தம்பியா.....
அழுதுநடிக் கின்ற
பன்னாடையே ...... காங்கிரசுப்
பதரே ..... நீ இன்னும்
( எத்தனை)



நன்றி : தமிழேந்தி








திங்கள், 2 பிப்ரவரி, 2009

ஆடல் கலை

அறிவு வளர்ச்சியும் நாகரீகமும் முதிர்ச்சிப் பெறுவதற்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் ஆடலிலும் பாடலிலும் ஈடுபட்டு வந்தான். நாகரிகம் வளர்ச்சி அடைய அடைய இசை, ஆடல் முதலியவை முன்னேற்றம் கண்டு கலை வடிவங்களாக முகிழ்ந்தன. இந்தியாவில் மிகத் தொன்மையான கூத்து நூல் எனக் கருதப்பெறும் நாட்டிய சாத்திரத்தை இயற்றிய பரத முனிவர் (கி.பி 2-ஆம் நூற்றாண்டு) நாட்டியம் எனும் சொல்லுக்குப் பாடல், ஆடல், அபிநயம், உரையாடல், ஒப்பனை, காட்சித் திரைகள் ஆகியவை ஒருங்கமைந்த நாடகம் என்றே பொருள் கூறினார். அவருடைய காலத்திலிருந்து ஆடல், தாண்டவம் (ஆண்களுக்குரியகூத்து) இலாசியம்(பெண்களுக்குரியகூத்து) நிருத்தம்(சுத்த நடனம்) என வகுக்கப்பட்டது. பின்னர் நிருத்தமும் அபிநயமும் கலந்த நிருத்தியம் எனும் வகையும் தோன்றியது.

சிவபெருமான் ஆடிய ஆடல் தாண்டவம் என்றும், பார்வதி ஆடிய ஆடல் இலாசியம் என்றும் சொல்லப்பெறுகிறது. பிற்கால ஆடல் இலக்கண நூல்களில் எண்ணற்ற ஆடல் வகைகள் குறிக்கப்பெறுகின்றன. பாரத முனிவர் தம் நூலில், தென்னாட்டில் தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் இசையிலும் நடனத்திலும் சிறபுற்று விளங்கினர் எனப் புகழ்ந்துரைக்கின்றார்.

தமிழ் நாட்டில் வழங்கி வந்த ஆடல் வகைகளை விவரிக்கும் ஐந்து நூல்கள், சிகண்டியின் “இசை நுணுக்கம்” சியாமளேந்திர்ரின் “இந்திரகாளியம்” அறிவனாரின் “பஞ்ச மரபு” ஆதிவாயிலாரின் “பரத சேனாபதீயம்” மதிவாணரின் “நாடகத் தமிழ் நூல்” என சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். தென்னாட்டில் வழங்கி வந்த இசையும் ஆடலையும் விவரிக்கும் கருவூலம் போன்ற நூல் சிலப்பதிகாரம் ஆகும். இதன் உரைகளையும் கலித்தொகை முதலாய சங்க இலக்கியங்களையும் ஆராய்ந்தால், அக்காலத்தில் ஆடல் கலை, கூத்து, குனிப்பு, என்றும் வழங்கி வந்தமையையும், அகக்கூத்து புறக்கூத்து என்ற பிரிவுகளைக் கொண்டிருந்தமையையும் அறியலாம். இவற்றைத் தவிர்த்து, கடவுலர் ஆடிய அல்லியம், கொடுகொட்டி, குடை, குடம், பேடி, கடையம், பாண்டரங்கம், மல், துடி, மரக்கால், பாவை எனப் பதினொரு வகைக் கூத்துகளையும், மக்கள் வழக்கிலிருந்த குரவை, கலிநடம், நோக்கு ஆகிய கூத்துகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

தென்னிந்திய நடனவகைகளுள் மிகத் தொன்மை வாய்ந்ததும் உலகப் புகழ் பெற்றதுமான ஆடல் வகை பரத நாட்டியம் ஆகும். இதனை நம் முன்னோர் தாசியாட்டம், சின்ன மேலம், சதிர் என்ற பெயர்களில் அழைத்தனர். தமிழ் நாட்டில் உருவான மற்றொரு வகை நாட்டியம் குறவஞ்சி ஆகும். இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழின் வடிவம் குறவஞ்சியில் அழகுடன் அமைந்துள்ளது. தமிழ் நாட்டுக்கே உரிய குறி சொல்லும் குறவன் , குறத்தி ( சிங்கன், சிங்கி) முதலிய பாத்திரங்கள் தோன்றும் இந்நாடகம் நகைச்சுவைக் கலையுடன் அமைக்கப்பட்டிருக்கும்.
ஆடல் கலை நம் முன்னோரின் ஊனோடும் உணர்வோடும் கலந்த கலையாகும்.


நன்றி: உமா பதிப்பகம்

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

கூத்துக்கலை

தமிழ் முத்தமிழ் என வழங்கப்பெறும். இயல்,இசை, கூத்து என்பன முத்தமிழின் கூறுகள்.வரி வடிவத்தில் இதயத்துக்கு இன்பம் பயப்பது “இயல்” என்றும், ஒலி நயத்துடன் பாடப்பெறும் பொழுது இசையுடன் இயைந்தது “இசை” என்றும் மெய்ப்பாடுகளினால் வெளிப்படுத்தப் பெறுவது “கூத்து” என்றும் வழங்கப்பெறும்.ஆடற்கலையும் நடிப்புக் கலையும் ஒருங்கே வளர்ந்தவை.‘பாவ, ராக, தாள வகை கொண்டு பதத்தால் பாட்டுக்கு இயைய நடிப்பது கூத்து என்று அபிதான சிந்தாமணி விளக்கும். கூத்து என்பதை இளங்கோ அடிகளார்தாம் நாடகம் என முதன் முதலில் குறிப்பிட்டவர் என்பர்.
சங்க கால மக்கள் வாழ்வில் வழிபாடு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. அவர்கள் ஆடியும் பாடியும் இறைவனை வழிபட்டனர்.இறைவனைக் கூத்தாடும் நிலையில் கண்டு மகிழ்ந்தனர். சங்க காலத்தில், வழிபாட்டு நிலையில் மட்டுமன்றிப் பொழுதுபோக்கு நிலையிலும், தொழில் அடிப்படையிலும் கூத்துகள் நிகழ்த்தப் பெற்றன.குரவைக்கூத்து, துணங்கைக்கூத்து,வெறியாட்டு, ஆரியக்கூத்து, பாவைக்கூத்து, வள்ளிக் கூத்து போன்ற பல்வகைக் கூத்துகள் நடத்தப்பெற்றன என்பதை சங்க நூல்களில் பரவலாகக் காணலாம். கூத்தர், பொருநர் போன்ற சொற்கள் தொழில் அடிப்படையில் கூத்துகள் நடைப்பெற்றன என்பதைக் குறிக்கும்.இடைக்காலத்தில் இறைவன் முன்பும் அரசர் முன்பும் சிலவிடங்களில் பொழுது போக்குக்காகவும் கூத்து நிகழ்த்தப்பெற்றது. இன்று, நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் ஒன்றாகக் கூத்து கருதப்பெறுகின்றது.

இந்தக் கவினுறு கலை அருகி வரினும் அதன் சிறப்பு இன்னும் குறையவில்லை எனலாம்.இக்காலத்தில் காணப்பெறும் கூத்து வகைகளுள் பாவைக்கூத்து, தெருக்கூத்து, கணியான் கூத்து ஆகியன கதை சார்ந்தவை என்றும் புரவியாட்டம், சாமியாட்டம், கழியாட்டம், காவடியாட்டம், கரகாட்டம், குறவன் – குறத்தி ஆட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்றவை கதை சாராதவை என்றும் பாகுபடுத்துவர்.போருக்குப் புறப்படும்பொழுது வெறிக்குரவையும், போரில் வெற்றிக்காகக் துணங்கைக் கூத்தும் ஆடுவர் எனச் சங்க இலக்கியம் கூறும்.

கூத்து எனும் சொல் முதலில் நடனத்தையும், பின்னர் கதை தழுவி வரும் கூத்தாகிய நாடகத்தையும் குறித்தது. அக்காலத்தில் இயற்றமிழைப் புலவர்களும், இசைத் தமிழ்ப்பாணர்களும் வளர்த்தமை போன்றே நாடகத்தமிழாகிய கூத்தையும் நாடகத்தையும் கூத்தர் என்போர் வளர்த்தனர். இயல், இசை, ஆகிய இரண்டும் கேட்போருக்கு இன்பம் தருவன. கூத்து, கேள்வி இன்பத்தோடு காட்சி இன்பத்தையும் தரவல்லது.கூத்து பெரிதும் விரும்பப்பட்டதால் கூத்தர் பெருகினர்; கூத்து வகைகளும் பெருகின. போட்டிகள் உருவாகின. அதன் விளைவுதான் இன்றைய நாடகங்களும் திரைப்படங்களும் ஆகும். சுருங்கக் கூறின், தமிழர் வாழ்வில் கூத்துக் கலை இரண்டறக் கலந்துவிட்டதென்றே கொள்ளலாம்.


நன்றி : உமா பதிப்பகம்


திங்கள், 26 ஜனவரி, 2009

வணிகம் செய்ய வந்த தமிழர்கள்

கி.பி 15-நூற்றாண்டுவாக்கில் மலாயாவில் மலாக்கா நகரம் வணிகச் சந்தையாக சிறந்து விளங்கியது. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து துணிமணிகள், யானைத்தந்தம், அரிசி, கோதுமை முதலியவற்றைக் கொண்டுவந்து விற்றுவிட்டு, அதற்குப் பதிலாக மிளகு, தகரம், பீங்கான், வாசனைத்திரவியம், பொன் முதலியவற்றை வாங்கிச் சென்று வியாபாரம் செய்துள்ளனர்.



வணிகத்திற்காக வந்த தமிழர்களில் சிலர் ஆறு மாதம் வரை மலாக்காவில் தங்கி இருப்பதுண்டு. அப்படிப்பட்ட காலத்தில் சிலர் மலாய்ப்பெண்களைக் காதலித்து இந்து முறைப்படி தாலிகட்டி மணந்துகொண்டு இங்கேயே தங்கினர். ஒரு சில தடவைகளில் கப்பல் புயலில் சிக்கியதால் தப்பிக் கரையேறிய தமிழர்களும் இங்ஙனம் மலாக்காவில் தங்க நேர்ந்த கதையும் உண்டு. இவர் பிள்ளை என்றும், செட்டி என்றும், முதலியார் என்றும், படையாச்சி என்றும் பலவகைப் பிரிவினராக இருந்தாலும் மலாக்காவிலேயே தங்கி மலாக்காச் செட்டிகளாகி விட்டனர். அவர்களின் மொழி மறைந்தும் பண்பாடு, வழிபாடு மறையாத மக்களாக இருப்பதை இன்றும் காணலாம். இவர்கள் கட்டிய பொய்யாத வியாகர் கோயில் இன்றைக்கு 350 ஆண்டுகள் பழமையுடையது. இவ்வாறே தமிழர்களும்- தமிழ் முசுலிம்களும் மலாயாவில் பல்வேறு பகுதிகளுக்குக் குடியேறி வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் நிரம்ப உள்ளன. அவர்களை அடுத்துத் தனவைசியம் பண்ணவந்த நகரத்தார் பெருமக்களும்- கல்விமான்களும்- உயர் அலுவல் பார்க்கும் ஆற்றல் படைத்தவர்களும் விரும்பியும், அழைக்கபட்டும் மலாயாவிற்குப் பரவலாக வந்துள்ளனர் என்பது வெள்ளிடைமலை. 1938 இல் கங்குரும்பை பெ.நா.மு.முத்துப்பழனியப்பன் ஜே.பி அவர்கள் எழுதிய “மலாயாவின் தோற்றம்” என்ற நூலில் இதன் விவரத்தைக் காணலாம்.



இவ்வாறு குடியேறிய தமிழர்களால் தமிழ்ப்பண்பாடுகள்- தமிழர் நடையுடை பாவணைகளின் சாயல்கள் மலாயாவில் மேலும் வேரூன்றியதால் வெண்கலக் குத்துவிளக்குகளைப் பாவிக்கும் பழக்கமும் வெற்றிலைப் பாக்கு போடும் பழக்க வழக்கமும் பரவத் தொடங்கின. வணிகத் துலாக்கோலும், வாழ்வியலில் நல்லெண்ணப் புரிந்துணர்வும், விளையாட்டில் பல்லாங்குழியும், பண்பாட்டில் மலர்மாலைகளும் தமிழர்களின் வருகையால் மேலும் இரண்டறக் கலந்தன.மற்றும் தமிழ்ச்சொற்களும் சமற்கிருத மொழிச் சொற்களும்- இந்தியச் சொற்களும் மலாய்மொழியிற் கலந்து மலாய் மொழியையும் வளர்த்தன. மலாய் மொழியிலுள்ள பண்பாட்டுச் சொற்களில் பெரும்பான்மை இந்தியச் சொற்களும், வழிபாட்டுச் சொற்களில் பொரும்பான்மை அரபுச் சொற்களும், அறிவியலில் ஆங்கிலச் சொற்களும் இரண்டறக் கலந்து பயன்படுத்தப்படுவதைக் கல்விமான்கள் மறுப்பதற்கு இல்லை.


கப்பல், பெட்டி, மீசை, ரோமம், ரூபம், ரகம், திரி, ஜெயம், ஆகம்ம், சக்தி, தேவி, புத்ரி, குரு, பாக்கி போன்ற நூற்றுக்கணக்கான சொற்கள் அப்படியே எவ்வித மருவுமின்றிப் பயன்படுத்தப்படுகின்றன. சிங்கம்- சிங்கா, தருமம்- தருமா, சங்காசனம்- சிங்காசனா, நாமம்- நாமா, நீலம்-நீலா, உபவாசம்- புவாசா, பாஷை- பகாசா, சாஸ்திரம்- சாஸ்திரா, வரம்- சுவாரா, கங்கை- சுங்கை என்பன சில. இன்னும் சில சொற்கள் முன்பின் இணைப்புப் பெற்று வழங்குகின்றன. கும்பல்- கும்புலான், ராஜாங்கம்- அரசாங்கம் என்பன போன்று ஏராளமாகும். இவ்வாறு மலாய்மொழியைத் தமிழோடும் தமிழ் பண்போடும் சேர்ந்து வளர்த்த பங்கினை மறைக்க முடியாது. மலாய்மொழி இலக்கியத்தின் தந்தை என்றும் முன்னோடி என்றும் போற்றப்படுகின்ற முன்ஷி அப்துல்லாவும் ஒரு தமிழ் முசுலிம் என்பதையும் மறுப்பதற்கில்லை.இது போன்ற வரலாற்றுச் சான்றுகளைக் கெடாவிலுள்ள பூஜாங் பள்ளத்தாக்கின் அகழ்வாய்வுகள் உறுதிப்படுத்தும். தமிழ் மன்னர்களின் வருகையாலும், வணிகர்களின் வருகையாலும் மலேசியாவின் மொழியும்,கலையும் பண்பாடும் பழக்கவழக்கங்களும் வளம் பெற்றன, நலம் பெற்றன என்றும் கூறலாம்.


நன்றி: தமிழ்க்குயிலார்

புதன், 21 ஜனவரி, 2009

மாமூலர் என்பதன் பொருள் என்ன ?

அழகன்

ஐயம் :

மாமூலர் என்றால் என்ன பொருள் ஐயா? திருமூலருக்கும்
மேன்மையாக காட்டவேண்டி அப்படி ஒரு அடைமொழியா?

தெளிவு :

மாமூலர் என்பதற்கு பெரிய ஆற்றலாளர் என்பது பொருளாகும். சங்க காலத்தில் மாமுலனார் என்ற புலவர் வாழ்ந்ததாக வரலாற்றில் சொல்லப்படுகிறது. அவரைப் போன்று மலேசியாவில் மெய்யறிவை உணர்த்திய மிகப்பெரிய ஆற்றலாளர் தான் ஐயா அவர்கள். மலேசியத்தில் ஒப்பற்ற மீமிசைச் சான்றோராக விளங்கியவர் செந்தமிழ்க்குறிஞ்சியார். அவரே பாவலருக்கு இச்சிறப்புப் பெயரை வழங்கியிருப்பது பெருமைக்குரிய வரலாற்றுச் செய்தியாகும். ஆனால், திருமூலருக்கும் மேன்மையாக நாம் யாரையும் ஒப்பிட முடியாது. அப்படி ஒப்பிடுவதும் சரியாகாது.

தமிழ்ப்பெண்களும் குங்குமமும்

கபிலன்

ஐயம் :
நம் திருமணமான தமிழ்ப்பெண்கள் நெற்றி,தலை வகிட்டில்
குங்குமம் இடுகின்றனரே? இதற்கு சமய விளக்கம் ஏதேனும்
உண்டா? இந்தப் பழக்கம் ஏதோ அந்நிய வரவாக
உணர்கிறேன். விளக்கம் தேவை

தெளிவு :

முற்காலத்தில் போருக்குச் செல்லும் வீரர்கள் நெற்றியில் அரத்தத்தைக்(இரத்தம்) கொண்டு வீரத்திலகமிடுவது தமிழர்களின் பண்பாடாகும். பிற்காலத்தில் அம்மை வழிபாடு தோன்றியப் பிறகு போருக்குப் போகும் வீரர்கள் வெற்றியை வேண்டி அம்மனை வழிபட்டு போருக்குச் சென்றனர். வீரத்திலகமிடும் மரபு ஏற்கெனவே இருந்துள்ளதால் இப்போது அம்மனை வழிபட்டு அரத்தத்திற்கு(இரத்தம்) பதில் குங்குமத்தால் திலகமிட்டுச் சென்றுள்ளனர். இதுவே, பின்னாளில் சமய மரபாக ஆகிவிட்டிருக்கிறது. ஆனால், நெற்றியில் குங்குமம் இடுவதுதான் தமிழர்களிடம் இருந்துள்ளது. தலை வகிட்டில் இடுவது தமிழர்களிடம் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இல்லை. இந்தப் பண்பாடு வடவர்களுக்கே உரியதாகத் தெரிகிறது. பண்பாடு அறியாத இன்றையப் பெண்கள் நமது பண்பாடு என்று நினைத்து ஆரியப் பண்பாட்டை பின்பற்றுவதும் போற்றி புகழ்வதும் நகைப்பிற்கிடமாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த மட்டிலும் தலை வகிட்டில் குங்குமம் இடுவது நமது பண்பாடு அல்ல. இதைப் பற்றி மேலும் அறிந்தவர்கள் நமக்குத் தெரிவிக்கலாம். நன்றி

செவ்வாய், 13 ஜனவரி, 2009

பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

வணக்கம் வாழ்க வளத்துடன்
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் எமது இதயங்கனிந்த பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

உலக அமைதி நிலைத்திட
உண்மை அன்பு விளங்கிட
இனிய வாழ்வு தொடங்கிட
ஈழம் விரைவில் மலர்ந்திட
புதிய பொங்கல் பொங்கிட
புத்தாண்டு நல்வாழ்த்துகள்

எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேரொன்றும் அறியேன் பராபரமே!

சனி, 10 ஜனவரி, 2009

மலேசியாவில் தமிழர்கள்

உலகெல்லாம் போற்றும் வளமும் பொழிவுமிக்க இன்றைய மலேசியா அமைவதற்கு முன்னர், மலாயாவென்றும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாணிகம் செய்யவந்த தமிழர்களால் சொர்ணபூமி என்றும் பல ஆண்டுகளுக்கு முன்புள்ள தமிழ் இலக்கியங்களில் மலையம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது தமிழர்களுக்கும் மலேசியாவிற்குமுள்ள தொடர்பு தாய்க்கும் மகவுக்கும் உள்ள தொடர்பு; அழுத்தமானது, பழமையானது, பிரிக்கமுடியாதது என்றுணரலாம். இக்கட்டுரை மலேசியாவில் தமிழர்களின் வரலாற்றை ஆராய்கிறது.


நாடாள வந்த தமிழர்கள்

கி.பி.454-இல் சுமத்திரா எனும் புட்பக நாட்டை சைவ மன்னர்களான ஈஸ்வர நரேந்திரன் ஆண்ட காலத்திலிருந்து தென்கிழக்காசியா நாடுகளுக்குத் தமிழர்களின் பயணம் தொடங்குகிறது. பின்னர் கி.பி. 1030-இல் இராசேந்திர சோழன் காழகம் அல்லது கடாரமென்னும் கெடாவை வென்றது முதல் மலேசியாவில் தமிழர்களின் பங்கு வேர்க்கொள்கிறது. பேராவின் மேற்குக் கரையிலிருந்து அதன் நடுப்பாகம் வரை கங்கா நகரம் என்கிற ஓர் இந்திய அரசும், பகாங்கு நதிதீரத்தில் இந்திரபுரன் என்ற பிறிதோர் அரசும் இருந்து வந்துள்ளன. இங்ஙனம் நாடாள வந்த தமிழ் மன்னர்களால் மலேசியத் தீவுகளில் தமிழர்களின் மொழியும், கலைகளும், பண்பாடுகளும், ஆட்சிமுறைகளும் வேரூன்றி உள்ளன.


மலேசியத் தீவுகளிலும், மலேசியாவிலும் இராமாயணக் கதைகளும், பாரதக் கதைகளும் பரவியதுடன் நிழலாட்டம் எனும் “ஓயாங் கூலிட்” கலைகளும் பரவி இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகின்றன. ஓயாங் கூலிட் கதையும் படைப்பும் முற்றிலும் இந்து முறைப்படியே நடத்தப்படுவதை இன்றும் காணலாம். மேழிச் செல்வமாகிய உழவு முறைகளும், மன்னவனைக் கையெடுத்துக் கும்பிட்டு வணங்கும் மரபுகளும் பேணப்பட்டன. இசுலாமியர்கள் கும்பிடும் வழக்கம் மற்றவராயினும் மலேசிய மன்னர்கள் இசுலாமியர்களாக இருந்தும் கை கூப்பி எழிலுறக் கும்பிடும் காட்சி மாட்சியுறத்தக்கது. மேலும் இந்து முறைப்படி மகுடம் சூட்டப்படுகின்ற பண்பாட்டுச் சடங்குகளும் மலாயர்களிடையே வரவேற்று ஏற்றுக் கொள்ளப்பட்டவை. மகுடத்தை “மகோடா” என்றும் நகரத்தை “நெகாரா” என்றும் இராஜ்யத்தை “கெராஜாஹான்” என்றும் மேலும் அரசனை “இராஜா” என்றும் அரசியைப் “பரமேஸ்வரி”என்றும் அழைக்கின்ற இந்தியப் பண்பாடுகள் மலாய்க்காரர்களால் தழுவப்பட்டன. இராஜா என்ற சொல் இசுலாமிய கலப்பிற்குப் பிறகு சுல்தான் ஆனாலும், இராணி பரமேஸ்வரியாகவே இருப்பதைக் காணலாம். பெர்லிஸ் சுல்தானை இன்றும் இராஜா என்றே அழைக்கின்றனர்.

பேராவில் மன்னன் முடிசூட்டப்பட்டுச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கையில் “ஸ்ரீ நராதிராஜா” என்பவர் சிதைந்த சமற்கிருதத்தில் வாழ்த்து வாசிக்கும் வழக்கு இன்றும் உண்டு. இதுபோல சயாம் மன்னன் முடி சூட்டப்படும்போது சிதைந்த திருவாசகப் பாடலான திருவெம்பாவை ஓதப்படுகிறது. இங்ஙனம் மலேசிய மக்களிடையே இறப்பு, இறப்பு, திருமணம், கல்வி, மருத்துவம், மந்திரம், பூசை, பணிவு,கனிவு அனைத்திலும் தமிழர்களின் பண்பாடுகளும் பழக்க வழக்கங்களும் ஊடுருவி வேரோடி நிற்பதைக் காய்தல் உவத்தலின்றி நோக்கினால் கண்டு கொள்ளலாம்.

நூலாதாரங்கள் இவற்றுக்கு விரிவாக இல்லையென்றாலும் கடாரத்தில்(கெடா) அகழ்ந்தெடுக்கப்பட்ட இந்துக் கோயிலின் அடித்தளமும், பீடோரில் கிடைத்த அவலோகிதேஸ்வரர் போன்ற சிலையும் அழியாத கலையாகிவிட்ட “ஓயாங் கூலிட் எனும் நிழலாட்ட கலைகளும் இதனை மெய்ப்பிக்கும்.மலாயா மண்ணுக்கு முதன் முதலில் நாகரிகத்தை அளித்ததுடன் இந்திய நாகரீகத்தாலும், இந்திய மொழிகளாலும் ஏற்றம் பெற்றது மலாயா மண்ணாகும் என்று ஆங்கில நூலறிஞர் ரோலன் பிராடல்(Rolland Braddol)குறிப்பிடுவதை மறுக்க முடியாது.

நன்றி: தமிழ்க்குயிலார்-ஈப்போ