ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

தமிழும் இசையும்

பண்பட்ட எல்லா மொழிகளிலும் இசை வாழ்கிறது. ஆனால், எந்த மொழியிலும் இதை முக்கியக் கூறாகச் சொல்வதில்லை; சிறப்பித்தும் போற்றுவதில்லை. ஆனால், தமிழில் மட்டுந்தான் இசைத்தமிழ் என்ற பிரிவே விளங்குகின்றது. சுதி,பாட்டு,பண்,தாளம், பாடுவோர் உள்ளம், கேட்போர் உள்ளம் ஆகியவை இசைந்தால்தான் அதை இசையென்று தமிழர்கள் கூறுவர். அப்படி இல்லையென்றால் அதன் பெயர் “இரைச்சல்” என்றாகிவிடும். இசைக்குப் “புகழ்” என்ற பெயரும் உண்டு என்பதைத் திருவள்ளுவம் இயம்புகின்றது.


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு

எனும் திருக்குறள் இதனை மெய்ப்பிக்கும்.இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் பண்டைய தமிழர்கள் இசையை எந்த அளவுக்குப் போற்றினார்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இறைவனையே இசைமயமாகக் கண்டவர்கள் தமிழ் மக்கள். ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே இறைவன் எனக் குறிப்பிட்டனர். அதனால் தான் இறைவனைப் பன்னிசையால் பாடிப் பரவினர். இம்முறையில் பண்ணோடு கூடிய பத்திப்பாடல்கள் பைந்தமிழில் பல உள்ளன. அவற்றுள் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் முதலியவை குறிப்பிடத் தக்கன.இந்நூல்களில் உள்ள பத்திப் பாடல்கள் தமிழ்த்தேனோடு இசைத்தேனையும் கலந்து சுவைதருவனவாகும்.

தமிழிசை தோன்றிய காலம், தமிழ்மொழி தோன்றிய காலமே! தமிழ் மக்களின் எண்ணம், சொல்,செயல், வாழ்வு அனைத்தும் இசை கலந்தவையாகவே காட்சியளிக்கின்றன. தமிழர் வாழ்வின் பெரும்பங்கை இசையே ஏற்றுள்ளது. குழந்தைப் பருவத்தில் தாலாட்டு, திருமணத்தில் நலுங்குப்பாட்டு, கருப்பக் காலத்தில் வலைக்காப்புப்பாட்டு, இறப்பின் போது ஒப்பாரிப்பாட்டு, என்று தமிழரின் வாழ்வில் இறப்பு முதல் பிறப்பு வரை இசை இடம் பெற்றுள்ளதும் இசையோடு தமிழர்கள்கள் வாழ்ந்தார்கள் என்பதும் தெளிவாகிறது.


இசை,இனிய கலை என்பதால் அது பயிரையும் வளர்க்கும் ஆற்றல் கொண்டது;மேலும் இசை மருந்தாகவும் பயன்படுகிறது.மனிதர்கள் மட்டுமின்றி அஃறிணை உயிர்களுக்கும் இசை பல வழிகளில் துணைபுரிகிறது. மேலைநாட்டுத் தத்துவ மேதையான “சேக்ஸ்பியர்”இசைக்குக் கட்டுபடாதவன் எத்தகைய கொடுஞ்செயலையும் செய்யக் கூடியவன் என்று கூறுகின்றார். இதனால்தான், இசையால் வசமாகாத இதயம் இவ்வையகத்தில் இல்லை என்று தமிழிசைச் சான்றோர்கள் இயம்புகின்றனர்.

நன்றி :- தமிழிசை
எடுத்தாளப்பட்டது

2 கருத்துகள்:

Admin சொன்னது…

நல்லதொரு பதிவு.... பகிர்வுக்கு நன்றிகள்...

கோவி.மதிவரன் சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றியன்