புதன், 19 நவம்பர், 2008



என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன்-வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்லமாட்டேன்!- வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்!- இந்தப்
பூட்கையில் ஓரடி தள்ளமாட்டேன்!

கண்ணிலும் கருத்திலும் காதிலும் உயிர்க்கின்ற
காற்றிலும் மிளிர்வது தமிழேதான் ! என்
கவலைக்கும் கரணியம் அதுவேதான் - உளம்
எண்ணியும் எழுதியும் எடுத்தெடுத் தியம்பியும்
இன்புறச் செய்வதும் தமிழேதான் - அதற்
கிணையென நிற்பதும் அதுவேதான்!

உடுக்கையில் உண்கையில் ஓரடி நடக்கையில்
உறக்கத்தும் வேறெதும எண்ணி யறியேன் - மனை
உறவிலும் காதலைப் பண்ணி யறியேன் - உயிர்
விடுக்கினும் தமிழெனும் நினைவொடு விடுத்திட
வேண்டுமென் றிறைவனைக் கேட்டுத் தொழுவேன் - ஒரு
வேற்றுமையும் இல்லையதில் உள்ளம் வழுவேன்!

என்மொழி தாய்மொழி, இன்மொழி அதைவிடுத்
தெவர்மொழி ஆயினும் கற்க மாட்டேன் !- வேறு
எவரையும் கைத்தொழ நிற்க மாட்டேன் - ஒரு
புன்மொழி புலைமொழி புதுமொழி எதுவுமிப்
புலத்தினில் கால்வைக்க ஒப்ப மாட்டேன் ! கோடிப்
பொன்னுக்கும் தமிழ் மனம் விற்கமாட்டேன் !


பாவலரேறு பெருஞ்சித்திரனார்

கருத்துகள் இல்லை: