செவ்வாய், 25 நவம்பர், 2008

தமிழர் எழுச்சி நாள்

இன்று நவம்பர் 25 மலேசிய தமிழர் வரலாற்றில் ம்றக்க முடியாத, நாள். மலேசியத் தமிழனின் குரல் உலகெங்கும் ஒலித்த ஒற்றுமைத்திருநாள். அதன் நினைவாக இக்கட்டுரை எழுதப்படுகிறது

“கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர் செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை,; எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே!

உலக மக்களின் ஒட்டுமொத்த பார்வையையும் ஈர்த்த வரலாற்றுப் பொன்னாள் நவம்பர் 25 .


51 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மலேசியத் தமிழர்கள் தங்களை அடிமை விலங்கிலிருந்து உடைத்தெறிந்து வாழ்வாதார உரிமைகளுக்காக குரல்கொடுக்க புறப்பட்ட நாள் தமிழர் எழுச்சி நாள்.

எமது இன எழுச்சிக்காக பல்வேறு நிலைகளிலிருந்தும் புறப்பட்ட எமது தமிழ்மக்களின் வீரத் திருநாள்.

மலேசியத் தமிழனாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட அனைவரும், இழந்துவிட்ட உரிமைகளை மீட்டெடுக்க ஒன்று கூடி, நமது உரிமைப் போரை அரசாங்கத்தின் செவிகளுக்கு உரக்க கூறுவதற்கு ஒன்றுகூடிய அந்த நினைவலைகள் இன்னும் நம் உணர்வையும் உயிரையும் விட்டு அகலவில்லை. பல்வேறு போராட்டங்களுக்கும் சவால்களுக்கும் இடையில் தனது வாழ்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் மலேசியத் தமிழர்களிடத்திலே ஒற்றுமை தோன்றிட வழிகோலிய அந்த வரலாற்றுப்பூர்வமான நாட்கள் என்றும் நினைவு கூறத்தக்கவை.
இந்நாட்டின் வளப்பத்திற்கும் செல்வ செழிப்பிற்கும் நாம் முதுகெலும்பாக விளங்கி வந்திருக்கின்றோம் என்பது வரலாற்று உண்மை. ஆனால் இன்று வரை நமக்கு மிஞ்சியது ஏமாற்றமே.அந்நிலையிலிருந்து நம்மை மீட்டெடுத்து, உரிமைக்குக் குரல் கொடுத்து, நம் உள்ளத்திலும் உணர்விலும் ஒற்றுமை எனும் ஒளிவிளக்கை ஏற்றிய அந்த ஐவரும் என்றென்றும் நினைவு கூறத்தக்கவர்கள்.
இனி நமக்குத் தேவை...

உடையினிலே ஒன்றாதல் வேண்டும்! உண்ணும்
உணவினிலே ஒன்றாதல் வேண்டும்,நல்ல
நடையினிலே ஒன்றாதல் வேண்டும், பேசும்
நாவினிலும் எண்ணத்திலும் ஒன்றாதல் வேண்டும்!
மடைதிறந்த வெள்ளம்போல் நமதே வைக்கும்
மாற்றாரை ஒழிப்பதற்கும் ஏறிப் பாயும்
படையினிலே ஒன்றாதல் வேண்டும்; வாழ்வின்
பயன்காண வேண்டுமன்றோ தமிழினத்தார்!


கருத்துகள் இல்லை: