ஞாயிறு, 5 அக்டோபர், 2008

தமிழாய்க் கனிந்தவர்கள்

சனி, 4 அக்டோபர், 2008

திருவருட் பேரொளி வள்ளலார் அருள்வருகைத் திருநாள்

இன்று 05.10.2008 திருவருட் பேரொளி வள்ளல் பெருமானார் அவர்கள் வருவிக்கவுற்ற அருள்வருகைத் திருநாள். அதனை நினைவு கூறும் முகத்தான் இக்கட்டுடை வெளியிடப்படுகின்றது.

அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி



தாம் வாழ்ந்த காலத்தில் பேசிய பேச்சாலும் எழுதிய எழுத்தாலும் ஆற்றிய செயலாலும் தமக்குப் பின்னும் சமுதாயத்தில் மிக நல்ல விளைவுகளை ஏற்படுத்தி நாம் மீண்டும்-மீண்டும் நினைக்கத்தக்க வகையில் உயர்ந்த பயன்களை வழங்கிய பெரிய மனிதர்களைத் தான் நாம் சான்றோர்கள் என்றும் ஞானிகள் என்றும் சித்தர்கள் என்றும் மதித்துப் போற்றிக் குறிப்பிடுகின்றோம். அவ்வகையில் மிக அண்மைய காலத்தில் தமிழ்ச்சமயத்தில் தோன்றி அளப்பரிய பங்கினை ஆற்றியவர்தான் திருவருட் பேரொளி இராமலிங்க வள்ளலார். உலகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய உயரிய ஒரு பொதுக் கருத்து ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை என்பதாகும். உலக உயிர்கள் எல்லாம் ஒன்று. அவ்வுயிர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதே வள்ளல் பெருமானார் வழி.


பிறந்த உயிர் என்றாவது இறக்கத்தான் வேண்டும் என்பது உலக நியதி. இந்நிலையை மாற்றி சாகாதவனே சன்மார்க்கி என்று தொடங்கி, சித்தர்கள் நிலையையும் ஆய்ந்து, அதன் தன்மையையும் உணர்ந்து இறுதியாக சாகாத நிலைக்கு மேல் நிலை இருக்கவேண்டும் என்று உணர்ந்து, அதுவே ஒளிவடிவம் என தெளிந்து, ஒளியாகவே உருமாறியவர்தான் வள்ளல் பெருமானார். அடிகளார் ஆண்டவன் அருளால் உள்ளொளி பெற்றவர்; அதனால் வெறும் அறிவாலன்றி, அருளால் பார்க்கும் ஆற்றல் பெற்றிருந்தார். எனவே தான் தமக்கு அறிவுத் தந்த அறிவாசான் எல்லாம் வல்ல இறைமைத் திருவருளே என்று பாடுகின்றார்.

வள்ளல் பெருமானார் அவர்கள் அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்திருந்த உலகீர் அனைவரையும் சன்மார்க்க நெறியிலே திளைத்திருக்க அவதரித்தவர். வள்ளல் பெருமானார் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சன்மார்க்கத்தின் வழி சாதி, மதம், சமயம், ஆசாரம் போன்ற பேதங்களை ஒழித்து அனைத்து உயிர்களையும் சமமாகவும், பொது நோக்குடனும் ஒருமையுணர்வுடனும் அன்புடனும் காணுதலே ஆன்மநேய ஒருமைப்பாடாகும் என உலகுக்கு உணர்த்தியவர். ஓரறிவு முதல் ஆறறிவுயிர் வரை எல்லா உயிர்களிடத்தும் இறைவன் குடிகொண்டிருப்பதனால், படைப்பில் உயிர்கள் பலவகையாக பிரிந்திரிப்பினும் அனைத்து உயிர்களிலும் இறைவன் உள்ளான் என்பதை அறிந்து உயிர்நலம் பேணுதலே ஆன்மநேய ஒருமைப்பாடாம் என்பது வள்ளல் பெருமானார் கருத்து.

வள்ளல் பெருமானார் இறைவனை வழிபடும் முறையிலும் புதுமையை புகுத்தினார். அப்புதுமை வழிபாடே சோதி வழிபாடு என்கிற ஒளி வழிபாடாகும். இறைவனைக் கருணையே வடிவமாகக் கொண்டு அருளை விளக்கமாகச் சிந்தித்து, இறைவனை ஒளி வடிவாக வழிபடுதலே சிறந்தது என வள்ளலார் கண்டார். எல்லா சமயங்களுக்கும் மார்க்கங்களுக்கும் பொதுவான வழிபாடே அருட்பெருஞ்சோதி வழிபாடாகும்.


வள்ளலார் அறிமுகப்படுத்திய அருட்பெருஞ்சோதி வழிபாடு மனிதன் தனக்குள் ஒளிந்து உள்ளொளியாக இருக்கும் இறைவனை உணரவும் அவ்வுள்ளொளியைப் பெருக்கிக் கொள்ளவும் உதவுவதோடு மட்டுமல்லாது ஆன்மலாபமாகிய மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறலாம் என்பதே வள்ளலாரின் ஒளிவழிபாட்டின் முடிந்த முடிபாகும்.

வியாழன், 2 அக்டோபர், 2008

மொழி வாழ இனம் வாழும்



மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம், உயர்ந்தபண்பாட்டின் ஒட்டுமொத்த வெளிப்பாடு. ஆக இன்று உலகில் பல்லாயிரம் மொழிகள் பேசப்பட்டு வந்தாலும் நடப்பில் உள்ள மொழிகள் மொத்தம் 6800 என மொழியியல் ஆய்வாளர்கள் கணக்கெடுப்புத் தெரிவிக்கின்றது. இவற்றில் பேசவும் எழுதவும் வல்லமை கொண்ட மொழிகள் எழுநூறுக்கு மேற்பட்டவையாகும். தன் சொந்த வரிவத்தில் எழுதப்படும் மொழிகள் சில நூறு மட்டுமே. இவ்வாறு உலகில் பல்வேறு தன்மைகளுடன் மொழிகள் இருந்து வந்தாலும் இவற்றுக்கெல்லாம் தாயாக விளங்கும் மூல மொழிகள் ஆறு என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. அவை முறையே தமிழ்,எபிரேய மொழி, கிரேக்க மொழி, இலத்தீன் மொழி, சமற்கிருதம்,சீனம் என்பனவாகும் இவற்றில் ஏசுநாதர் பேசிய எபிரேய மொழி, சாக்ரடீசு பேசிய(ஆதி) கிரேக்க மொழி, சீசர் பேசிய இலத்தின் மொழி, வால்மீகி பேசிய வடமொழி(சமற்கிருதம்) என்பன இன்று வழக்கில் இல்லை. ஆனால், இத்தனை மொழிகள் வாழ்ந்த காலத்திலும் வளமோடு வாழ்ந்து இன்றளவும் சீரிளமைக் குன்றாது சிறப்புற வாழ்கின்ற ஒரே மொழி நமது தமிழ்மொழியே. கன்பூசியஸ் பேசிய சீன மொழியும் பழமையான மொழிகளில் ஒன்றாகச் சொல்லப்படுகின்றது.

இன்றைக்கு ஆதி மொழிகளான கிரேக்க மொழியிலிருந்து உருமாறிய கீரீக், எபிரேய மொழியிலிருந்து உருவான ஈப்ரு, நவீன இலத்தீன், ஆலயங்களில் எஞ்சி இருக்கிற சமற்கிருதம், சீனம் தமிழ் ஆகியவைகளே பழமை மொழிகளாக அங்கீகரிகப்பட்டுள்ளன. இந்தியாவில் சமற்கிருதம் பார்ஸ்சி,அரபி இப்போது தமிழ் செம்மொழிகளாக ஏற்கப்பட்டுள்ளன. இருப்பினும் உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் ஒரே மொழி தான் ஒத்துப் போகிறது. அந்த மொழி நம் தமிழ்மொழி என்று கூறுகிறார் உலகின் மாபெரும் மொழி அறிஞர் மூதறிஞர் நோம் சாம்சுகி கூறுகிறார்.

தமிழ்மொழி இந்தியத் துணைக் கண்டத்தின் மிகப்பழமையான மொழி. அது, தனித்துவமான இலக்கணம், இலக்கியம் கொண்டது. கிறித்தவ மதத்தைப் பரப்ப வந்த பாதர் “பெஸ்கி” எனப்படும் வீரமாமுனிவர், ஜி.யு.போப், கால்டுவேல் மற்றும் எல்லீஸ் ரேணியஸ், பாப்ரீசியர் ,ராட்லர், வின்சுலோ போன்ற பெருமக்கள் மதம் பரப்புவதற்காகத் தமிழ் படிக்கத் தொடங்கியபோது தமிழின் இனிமை, அதன் இலக்கியச் செழுமை, தனித்துவமான வரலாறு, மரபு சார்ந்த அறிவியல் ஆகியனவற்றைப் படித்து மயங்கி, வியந்து தமிழுக்குப் பெரும் தொண்டாற்றினார்கள். தமிழில் இருந்த தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, பரிபாடல், திருமந்திரம், திருவாசகம், நாலடியார் போன்ற பழந்தமிழ் நூல்களைப் படித்து வியந்து தமிழின் மீது காதலே கொண்டார்கள்.

தமிழின் இனிமை, தொன்மை, இலக்கணம், உயர்வான இலக்கியம் என்பன அந்த மேல்நாட்டு அறிஞர்களைத் தமிழ்ப்பத்தர்களாக மாற்றியது. இது வரலாற்று உண்மை. தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல. அது நேசிப்பவர்களை நேசிக்க வைக்கும் மொழி. அதனை அனுபவித்தால் தான் அதன் இனிமை புரியும். எனவே தான் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் அவர்கள் “தமிழுக்கு அமுதென்று பேர் என்றார்” அவர் பிறிதொரு கவிதையில்

இனிமைத் தமிழ்மொழி எமது- எமக்
கின்பம் தரும்படி வாய்த்த நல் அமுது

என்கிறார். மகாகவி பாரதியாரோ உச்சநிலைக்குச் சென்று
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப்போல்
இனிதாவது எங்கும் காணோம் ! என்று பாடுகிறார். அதுமட்டுமல்ல, அதற்கு மேலே போய் ஒரு கட்டளையும் இடுகின்றார்.

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்
வகை செய்தல் வேண்டும். என்பதே அது.

எனவே,தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்ய ஒவ்வொரு தமிழரும் வினையாற்ற வேண்டும் என்பது நமது அவா .

நன்றி:- வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்