புதன், 26 நவம்பர், 2008

மாவீரர் நாள்

இன்று நவம்பர் 27 உலகத் தமிழின விடுதலைக்காக தனது இன்னுயிரை ஈகம் செய்திருக்கின்ற ஆயிரமாயிரம் வீர வேங்கைகளை நினைவு கூறும் நாள். அவர்கள் அங்கே புதைக்கப்படவில்லை, மாறாக ஒவ்வொரு தமிழர் உள்ளங்களிலும் விதைக்கப்பட்டிருக்கின்றனர்.

தனது இன்னுயிரை ஈந்து விடுதலைப் போருக்கு வீறு சேர்த்த மாவீரர்கள் அவர்களின் தலைமுறையிலேயே போற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் தமிழீழ மாவீரர் நாள். தமிழீழ விடுதலைப் போருக்குத் தனது இன்னுயிரை நீத்த மாவீரர்களின் எண்ணிக்கை பத்து,நூறு என்ற நிலை மாறி ஆயிரக்கணக்காக உயர்ந்துவிட்ட நிலையில் ஒவ்வொரு மாவீரரையும் தனித்தனியாக ஆண்டுதோறும் அவரவர் நினைவு நாட்களில் நினைவு கூர இயலாது.எனவே, அனைவரையும் ஒரே நாளில் நினைவுகூரக் கூடியதாக தமிழீழ விடுதலைப் போரில் முதல் களச் சாவடைந்த இயக்கவீரர் லெப்டினன் சங்கரின்(சத்தியநாதன்) நினைவு நாளான நவம்பர் 27-ஆம் நாளை பொதுவான நாளாகத் தேர்ந்தெடுத்து 1989-ஆம் ஆண்டில் தலைவர் அவர்கள் மாவீரர் நாளை அறிவித்தார்.


1989-ஆம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப்பெரிய நிகழ்வாகத் தமிழீழ மாவீரர் நாள் தமிழீழ மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும்,தமிழீழம் மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு. ஏனைய நாடுகளிலெல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழா எடுக்கப்படுகின்றனவே தவிர, போராட்டம் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை. ஆனால்,விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும், எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கிடையிலும், பல்வேறு நெருக்கடிக்களுக்கிடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழ்மக்கள் மண்ணின் விடிவுக்காகத் தம் இன்னுயிரை ஈய்ந்த மாவீரர்களை எழுச்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர்.



வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்படும். நடுகற்கள் நாட்டப்படும் வழிபாடியற்றப்படுகின்றன. மாவீரர் நாளில் மாவீரர்களின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதாக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு, அன்று தமிழீழ மக்களால் போற்றி மதிப்பளிக்கப் படுகின்றனர்.
மாவீரர் நினைவாக பின்பற்றப்படும் நாட்கள்
1. கடலிற் காவியமான கிட்டு உட்பட பத்து வேங்கைகள் நினைவாக 16.01.1993

2. அன்னை பூபதி அம்மா நினைவு நாள், மார்ச்சு மாதம் 19-நாள் தொடக்கம், ஏப்பிரல் மாதம் 19-நாள் வரை


3. கரும்புலிகள் நாள் 05.07.1987

4. தியாக தீபம் திலீபன் நினைவுநாள். செப்தம்பர் 15-ஆம் நாள் தொடக்கம் செப்தம்பர் 26-ஆம் நாள் வரை.

5. குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 வேங்கைகள் நச்சுக்குப்பி கடித்து வீரச்சாவடைந்த நாள் 05.10.1987

6. தமிழீழ விடுதலைப் போரில் இன்னுயிர் ஈய்ந்த முதற் பெண்புலி மாலதி( தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்) 10.10.1987

7. மாவீரர் நாள், நவம்பர் 25 தொடக்கம் 27 வரை
நன்றி : "மாவீரர் நாள் கையேடு"

உலகத் தமிழினத் தலைவர் பிறந்தநாள்

இன்று உலகத் தமிழினத்தின் விடுதலைக்காக தன் வாழ்நாளை ஈகம் செய்து போராடிவரும் தமிழின வேங்கை வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள். அதனை நினைவு கூரும் முகத்தான் இக்கட்டுரை இடம்பெறுகின்றது



பிரபாகரன், வரலாறு தமிழர்களுக்குத் தந்த ஒரு தலைவன். ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்குத் தந்த தலைவன். அடிபணிந்து, தலைகுனிந்து, அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன் ஆர்த்தெழுந்து, படைதிரண்டு அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன். தமிழீழ மண்ணில் ஒரு புரட்சிகர ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டு, யுத்தத்தின் மையமாக நின்று, அதன் உந்துவிசையாக இயங்கி வெற்றியின் சிகரத்தை நோக்கி அதனை வீறுநடை போடவைக்கும் பெருந்தலைவன்.

குறுகிய ஒரு காலத்திற்கு முன்னால் சிறிய ஆயுதக் குழுவொன்றின் கெரில்லாத் தலைவனாக மட்டுமே இனங்காணப்பட்ட பிரபாகரன், இன்று தொன்மையும் செழுமையும் வாய்ந்த பழம்பெரும் பாரம்பரியங்கள் மிக்க இனமொன்றின் தேசியத் தலைவராக உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மாமனிதன். தமிழன் அடிபட்டு,தமிழன் துன்புற்று, தமிழன் அலைந்தோடி,தமிழன் கண்ணீர் சிந்திக் கிடந்த ஒரு காலகட்டத்தில் இனப்பற்று மிகுந்த ஒரு புரட்சி வீரனாக ஆயுதம் ஏந்திய பிரபாகரன், வீழாத படையாகத் தமிழன் அணிதிரண்டு, ஓயாத புயலாகப் பகையைச் சுழன்றடித்து, சாயாத மலையாக நிமிரும் வரலாற்று அதிசயத்தைக் கண்முன்னால் நிகழ்த்தியப் பெருந்தலைவன். தனியொரு மனிதனாய் நின்று, தமிழீழத் தேசியத்தின் ஆன்மாவைத் தட்டியெழுப்பி, தமிழர்களையே வியக்க வைத்த பெரும் வீரன்.

குலையாத கட்டுப்பாடும், வழுவாத நேர்மையும், தமிழன் வாழ்வு நெறி பிறழாத ஒழுக்கமும், சளையாத போர்த்திறனும், இளகாத வீரமும், யாரும் நினையாத வகையாக, எவரும் மிகையாக நேசிக்கும், உயிரை இயல்பாகத் தூக்கி எறியும் கலையாத தேசப்பற்றும், சுதந்திரத்தில் தணியாத தாகமும் கொண்டோராக ஆயிரமாயிரம் இளையோரை வனைந்தெடுத்து, தளராத துணிவான, தேசத்தின் பலமான படையொன்றை உருவாக்கி, உலகில் எவருமே புரியாத விதமாக ஒரு மாபெரும் சாதனைப் படைத்த தளபதி.

தத்தமது தேசங்களிற்கும்,இனங்களிற்கும் தங்களது பெயர்களினால் பெருமையினைத் தேடித்தந்த, உலக சரித்திரத்தின் தலைசிறந்த மனிதர்களின் வரிசையில் அவரது பெயரும் பொறிக்கப்பட்டுவிட்டது.! பிரபாகரன் என்ற பெயர் தமிழீழத்திற்கும் தமிழினத்திற்கும் ஓர் அழியாத புகழ்! என்றும் கிடையாத தலைநிமிர்வு!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்



நன்றி: தலைவரின் சிந்தனைகள்


செவ்வாய், 25 நவம்பர், 2008

தமிழர் எழுச்சி நாள்

இன்று நவம்பர் 25 மலேசிய தமிழர் வரலாற்றில் ம்றக்க முடியாத, நாள். மலேசியத் தமிழனின் குரல் உலகெங்கும் ஒலித்த ஒற்றுமைத்திருநாள். அதன் நினைவாக இக்கட்டுரை எழுதப்படுகிறது

“கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர் செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை,; எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே!

உலக மக்களின் ஒட்டுமொத்த பார்வையையும் ஈர்த்த வரலாற்றுப் பொன்னாள் நவம்பர் 25 .


51 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மலேசியத் தமிழர்கள் தங்களை அடிமை விலங்கிலிருந்து உடைத்தெறிந்து வாழ்வாதார உரிமைகளுக்காக குரல்கொடுக்க புறப்பட்ட நாள் தமிழர் எழுச்சி நாள்.

எமது இன எழுச்சிக்காக பல்வேறு நிலைகளிலிருந்தும் புறப்பட்ட எமது தமிழ்மக்களின் வீரத் திருநாள்.

மலேசியத் தமிழனாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட அனைவரும், இழந்துவிட்ட உரிமைகளை மீட்டெடுக்க ஒன்று கூடி, நமது உரிமைப் போரை அரசாங்கத்தின் செவிகளுக்கு உரக்க கூறுவதற்கு ஒன்றுகூடிய அந்த நினைவலைகள் இன்னும் நம் உணர்வையும் உயிரையும் விட்டு அகலவில்லை. பல்வேறு போராட்டங்களுக்கும் சவால்களுக்கும் இடையில் தனது வாழ்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் மலேசியத் தமிழர்களிடத்திலே ஒற்றுமை தோன்றிட வழிகோலிய அந்த வரலாற்றுப்பூர்வமான நாட்கள் என்றும் நினைவு கூறத்தக்கவை.
இந்நாட்டின் வளப்பத்திற்கும் செல்வ செழிப்பிற்கும் நாம் முதுகெலும்பாக விளங்கி வந்திருக்கின்றோம் என்பது வரலாற்று உண்மை. ஆனால் இன்று வரை நமக்கு மிஞ்சியது ஏமாற்றமே.அந்நிலையிலிருந்து நம்மை மீட்டெடுத்து, உரிமைக்குக் குரல் கொடுத்து, நம் உள்ளத்திலும் உணர்விலும் ஒற்றுமை எனும் ஒளிவிளக்கை ஏற்றிய அந்த ஐவரும் என்றென்றும் நினைவு கூறத்தக்கவர்கள்.
இனி நமக்குத் தேவை...

உடையினிலே ஒன்றாதல் வேண்டும்! உண்ணும்
உணவினிலே ஒன்றாதல் வேண்டும்,நல்ல
நடையினிலே ஒன்றாதல் வேண்டும், பேசும்
நாவினிலும் எண்ணத்திலும் ஒன்றாதல் வேண்டும்!
மடைதிறந்த வெள்ளம்போல் நமதே வைக்கும்
மாற்றாரை ஒழிப்பதற்கும் ஏறிப் பாயும்
படையினிலே ஒன்றாதல் வேண்டும்; வாழ்வின்
பயன்காண வேண்டுமன்றோ தமிழினத்தார்!


புதன், 19 நவம்பர், 2008

கோலக்கலை

பழங்கால மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்க்கை நடத்திய போது இயற்கையிடம் மனிதன் தானாகக் கற்றது அல்லது தெரிந்து கொண்டது ஏராளம். அவ்வகையில் வந்ததுதான் கோலக்கலை.கோலம் என்றால் அழகு,ஒப்பனை எனப் பொருள்படுகிறது. எழுத்துகள் வருவதற்கு முன்னரே கோடுகள், குறியீடுகள் இருந்தன என வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். தொடக்கத்தில் மனிதன் வெறும் கோடுகளைப் போட்டிருக்கின்றான்.பிறகுதான் அவற்றை வளைத்துக் கோலமாக இட்டிருக்கின்றான்.தொடக்கத்தில் மாட்டு தொழுவத்தில் சாணத்தால் மெழுகிய பகுதிகளில் பூச்சிப்பொட்டுகள் வராமலிருப்பதையும் கவனித்தவர்கள் வீட்டினுள்ளே இம்முறையைப் பயன்படுத்தினர். பின்னர் அதுவே கோலமாக மாறியிருக்கிறது. இயற்கையிடம் இருந்து பலவற்றை அறியும் அறிவைக்கொண்ட மனிதனின் கலை உணர்வின் வெளிப்பாடுதான் கோலம். அது தொடக்கத்தில் வாசல் கோலமாக தொடங்கியிருக்கிறது. மேலும் மண்ணில் ஊறும் உயிரினங்களுக்கு உணவாக ஆகும் என்பதால் அரிசிப் பொடியில் கோலம் போடப்பட்டிருக்கிறது.






புள்ளிகளையும்,கோடுகளையும் கொண்டு உருவாக்கப்படும் கோலங்கள் நம்பிக்கையின் வெளிப்பாடாக பண்பாட்டின் அடையாளமாக தமிழர் வாழ்க்கையில் திகழ்ந்தன. அவை அரங்கக் கோலம், மணல் கோலம், புனல் கோலம், அனல் கோலம் எனப் பல்வகைப்படும். அக்காலங்களில் நடன அரங்கில் அரங்கக்கோலம் போடப்பட்டது. அரங்கம்+கோலம்= அரங்கக்கோலம். அது ரங்கோலம் என மருவி ரங்கோலி எனப் பெயர் மாறி வடநாடுகளில் பரவின என்பது வரலாற்று உண்மையாகும். ஆண்டுதோறும் அமங்கல நாட்கள் தவிர ஏனைய நாட்களில் வாசலில் கோலம் போட்டாலும் மார்கழி மாதத்தில் போடுகிற கோலம் சிறப்பானவை. மாதங்களில் மார்கழி என ஆன்மீக ரீதியில் சொன்னாலும் அறிவியல் ரீதியாகவும் தை மாதத்தை எதிர்நோக்குகிற மிகச்சிறந்த மாதமாகும். மார்கழி மாதம் என்பதனால் விவசாயப் பொருட்களைச் சேகரிக்கிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. எனவே, அம்மாதத்தில் திருமணம் செய்யாமல் தைமாதத்தை எதிர்நோக்கிய சிந்தனையோடு நிலத்தை உழுதுண்டு வாழ்ந்தவர்கள் இருந்தார்கள். எனவே, நிலம் சார்ந்த மரபுவழிச் சிந்தனை அவர்களுக்கு இருந்தது. மார்கழி மாதம் பனிமழை பெய்யும் மாதமானதால் அக்காலத்தில் பசியில் தவிக்கக்கூடாதென்று, சிற்றுயிர்கள் குறிப்பாக எறும்புகளுக்கு உணவிடுவது போல் அரிசிப்பொடியில் வாசல்கோலம் இட்டனர். அவ்வாறு இடுகிற உணவை எறும்புகள் உண்ணுவது உண்மையாகும்.

கோலம் வரைகிற பண்பாட்டு நடைமுறையில் கூட நுண்ணுயிர்களின் பசிப்போக்குகின்ற உயர்ந்த பண்பாட்டை அக்காலத்தமிழர் கொண்டிருந்தனர் என்பது வியப்பானதுதான்? ஆனால், இன்று நாகரிகம் என்ற உணர்வில் உண்பதற்கு உதவாத வேறுவகை(கற்களின்) பொடிகளில் கோலம் இடுதல், பழந்தமிழர் கோலப் பண்பாட்டை உள்வாங்கவில்லை என்று பொருள்படுகிறது.




இன்றைய தமிழர்கள் சிந்தித்துத் தெளிவு பெறுவார்களாக!


நன்றி:- வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்


என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன்-வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்லமாட்டேன்!- வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்!- இந்தப்
பூட்கையில் ஓரடி தள்ளமாட்டேன்!

கண்ணிலும் கருத்திலும் காதிலும் உயிர்க்கின்ற
காற்றிலும் மிளிர்வது தமிழேதான் ! என்
கவலைக்கும் கரணியம் அதுவேதான் - உளம்
எண்ணியும் எழுதியும் எடுத்தெடுத் தியம்பியும்
இன்புறச் செய்வதும் தமிழேதான் - அதற்
கிணையென நிற்பதும் அதுவேதான்!

உடுக்கையில் உண்கையில் ஓரடி நடக்கையில்
உறக்கத்தும் வேறெதும எண்ணி யறியேன் - மனை
உறவிலும் காதலைப் பண்ணி யறியேன் - உயிர்
விடுக்கினும் தமிழெனும் நினைவொடு விடுத்திட
வேண்டுமென் றிறைவனைக் கேட்டுத் தொழுவேன் - ஒரு
வேற்றுமையும் இல்லையதில் உள்ளம் வழுவேன்!

என்மொழி தாய்மொழி, இன்மொழி அதைவிடுத்
தெவர்மொழி ஆயினும் கற்க மாட்டேன் !- வேறு
எவரையும் கைத்தொழ நிற்க மாட்டேன் - ஒரு
புன்மொழி புலைமொழி புதுமொழி எதுவுமிப்
புலத்தினில் கால்வைக்க ஒப்ப மாட்டேன் ! கோடிப்
பொன்னுக்கும் தமிழ் மனம் விற்கமாட்டேன் !


பாவலரேறு பெருஞ்சித்திரனார்

வியாழன், 13 நவம்பர், 2008

குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைக்க வேண்டியதன் அவசியம் என்ன?

தெளிவு :


மொழி என்பதுஓர் இனத்தின் உயிர் நாடி, பண்பாட்டு அடையாளம், ஓர் இனத்தின் முகவரி. நம் மொழி நம்மைக் காட்டும். ஒருவருடைய பெயரைக் கேட்டதுமே அவர் என்ன இனம் என அடையாளப் படுத்துவதற்குத்தான் பெயர். ஆனால் இற்றைய நிலையில் பலர் புரியாத மொழிகளில் பெயர் வைப்பதையே பெருமையாக நினைக்கின்றனர். இதை விட வெட்கக் கேடானா செயல் ஒன்றுமில்லை. இன அடையாளம் இல்லாத நிலையில் வாழும் ஒருவன் உலகத்தில் மதிப்பிழந்து போய்விடுவான் என்பது வரலாற்று உண்மை. அவ்வகையில் நமது மொழியையும் பண்பாட்டையும் இழந்து விட்டு அடையாளம் இல்லாத இனமாக வாழ்வதைவிட இறப்பதே மேல். எனவே, நமது மொழியின் வரலாற்றுச் சிறப்பினையும் மாண்பினையும் உணர்ந்து நமது குழந்தைகளுக்கு நல்லதமிழ்ப்பெயரைச் சூட்டுங்கள்; நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்.

தமிழே தமிழரின் முகவரி

தமிழிசை


ஒரு இனம் தனித்துவ இனமாக தம்மை அடையாளப்படுத்த தாய்மொழி,பண்பாடு, இசை, கலை, மருத்துவம், வாழ்வியல், உணவு, உடை, நாட்டியம் என்பனத் தனித்துவமானதாக இருக்க வேண்டுமென்பது இலக்கணமாகும். நமது தாய்மொழியான தமிழுக்கு இவை அத்தனை கூறுகளும் இருந்தன என்பது வரலாற்று உண்மையாகும். ஆனால், கடந்த கால அந்நியப் படையெடுப்புகளின் தாக்கத்தினால் வேற்று மொழியும் அது சார்ந்த பண்பாடும், இசையும் வேறு பலவும் மேம்பட்டன. இதன் விளைவாக தமிழினம் தனது தனித்துவத்தை மறந்து வாழப் பின்தள்ளப்பட்டது. தனித்துவமான தமிழர் இசை மறக்கப்பட்டு, வடவர் இசையும், மின்சார நாகரிகம் அறிமுகப்படுத்திய மேனாட்டு இசையும் தமிழர் இசையாக அறிமுகம் செய்யப்பட்டன. தமிழர் இசை தொல்காப்பிய காலத்திற்கு முற்பட்டது; அது தனித்துவமானது.


ஓர் இனம் தாய்மொழியையும் தன் இசையையும் இழந்து விடுகிறபோது அந்த இனம் உலக வரலாற்றில் இருந்து மறைந்து போகும் என்பது வரலாற்று உண்மை. தமிழர்களுக்கு மண் சார்ந்த இசை தாய்மொழியோடு இணைந்தே வந்துள்ளது. “தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்”என திருநாவுகரசர் வார்த்தைகளும் அதனை உறுதியாக்கியுள்ளது. தனித்துவ இசையோடு தமிழ் எழுத்து நின்றதற்கு வரலாறு உண்டு. தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தில் இசை பற்றிய செய்திகள் இருக்கின்றன.


தொல்காப்பியத்தில் பறை,யாழ் என்பன வருகின்றன. ஆகவே, இன்றைக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்ற பறையே தமிழரின் ஆதியிசைக் கருவியென்பதும் உறுதியாகிறது. இந்தப் பறையோடும் யாழும் ஆதி இசைக் கருவியே. அத்தோடு குழலும் சேர்கிறது.இதிலிருந்து தமிழிசை தனித்துவ மரபுகளோடு மட்டுமன்றி மரபு சார்ந்த இசைக்ருவிகளோடும் உருவானது என்பது உறுதியாகிறது. பண்டையத் தமிழ் இசை நூல்களில் இசைக்கருவிகள் பற்றி விரிவாக எழுதப்பட்டிருக்கின்றன. பறை எனப்படும் தோற்கருவியும், வங்கியம் அல்லது குழல் எனப்படும் துளைக்கருவிகளும், யாழ் எனப்படும் நரம்புக்கருவிகளும், மண் வெண்கலத்தால் செய்யப்படும் கஞ்சக்கருவிகள் என்பன 2000 ஆண்டுகட்கு முன்னரே அறியப் பெற்று அவற்றுக்கு இலக்கணம் எழுதப்பட்டிருக்கிறது.

உலக இசை வரலாற்றில் தமிழ் இசையே மிகத் தொன்மையான சிறந்த இசை இலக்கணப் பண்பாடுகளுடன் கூடிய இசையாகத் திகழ்ந்தது என்பதற்கு ஆதாரமாகப் பல இலக்கிய வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. மத்தளம், யாழ், குழல் ஆகிய மூன்றையும் சங்கக் காலத்தில் இசைக்கருவிகளாகக் கொண்டிருந்தார்கள். யாழ் என்னும் இசைக்கருவி பண்டையக் காலத்தில் தமிழ் மண்ணில் சிறப்பாக வழங்கி வந்தது.அது உலக இசைக் கருவியாக இருந்தது. உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியாய்த் திகழ்ந்த சிந்துவெளி நாகரிகத்தைப் புலப்படுத்தும் மொகஞ்சதாராவிலும் அரப்பாவிலும் தமிழர் கண்ட யாழ் இருந்ததை அங்கு இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள முத்திரைகளில் அறியப்படுகின்றது.

யாழ், வில்யாழ், பேரியாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ், சகோட யாழ் எனப் பலவகைப்படும்.அறுவகை சிறுபொழுதிற்கும் யாழ் எதுவென குறிக்கப்பட்டுள்ளது.

வைகறை - மருத யாழ்
நண்பகல் - பாலையாழ்
ஏற்பாடு(மாலைக்கு முன்) _ நெய்தல் யாழ்
மாலை - முல்லை யாழ்
யாமம் - குறிஞ்சி யாழ்

எனவே, பண்டையத்தமிழர் கண்டு காட்டிய தமிழிசைக்கு மறுவாழ்வு ஏற்பட வேண்டும். தமிழ் இசை முழங்கினால் தான் தமிழர் வாழ்வு, தமிழ் வாழ்வாக அமையும். தமிழர் கண்ட தமிழிசையைப் போற்றிப் பேணுவதே இற்றையத் தமிழரின் தலையாய கடமையாகும்.
நன்றி:- வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்