சனி, 10 ஜனவரி, 2009

மலேசியாவில் தமிழர்கள்

உலகெல்லாம் போற்றும் வளமும் பொழிவுமிக்க இன்றைய மலேசியா அமைவதற்கு முன்னர், மலாயாவென்றும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாணிகம் செய்யவந்த தமிழர்களால் சொர்ணபூமி என்றும் பல ஆண்டுகளுக்கு முன்புள்ள தமிழ் இலக்கியங்களில் மலையம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது தமிழர்களுக்கும் மலேசியாவிற்குமுள்ள தொடர்பு தாய்க்கும் மகவுக்கும் உள்ள தொடர்பு; அழுத்தமானது, பழமையானது, பிரிக்கமுடியாதது என்றுணரலாம். இக்கட்டுரை மலேசியாவில் தமிழர்களின் வரலாற்றை ஆராய்கிறது.


நாடாள வந்த தமிழர்கள்

கி.பி.454-இல் சுமத்திரா எனும் புட்பக நாட்டை சைவ மன்னர்களான ஈஸ்வர நரேந்திரன் ஆண்ட காலத்திலிருந்து தென்கிழக்காசியா நாடுகளுக்குத் தமிழர்களின் பயணம் தொடங்குகிறது. பின்னர் கி.பி. 1030-இல் இராசேந்திர சோழன் காழகம் அல்லது கடாரமென்னும் கெடாவை வென்றது முதல் மலேசியாவில் தமிழர்களின் பங்கு வேர்க்கொள்கிறது. பேராவின் மேற்குக் கரையிலிருந்து அதன் நடுப்பாகம் வரை கங்கா நகரம் என்கிற ஓர் இந்திய அரசும், பகாங்கு நதிதீரத்தில் இந்திரபுரன் என்ற பிறிதோர் அரசும் இருந்து வந்துள்ளன. இங்ஙனம் நாடாள வந்த தமிழ் மன்னர்களால் மலேசியத் தீவுகளில் தமிழர்களின் மொழியும், கலைகளும், பண்பாடுகளும், ஆட்சிமுறைகளும் வேரூன்றி உள்ளன.


மலேசியத் தீவுகளிலும், மலேசியாவிலும் இராமாயணக் கதைகளும், பாரதக் கதைகளும் பரவியதுடன் நிழலாட்டம் எனும் “ஓயாங் கூலிட்” கலைகளும் பரவி இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகின்றன. ஓயாங் கூலிட் கதையும் படைப்பும் முற்றிலும் இந்து முறைப்படியே நடத்தப்படுவதை இன்றும் காணலாம். மேழிச் செல்வமாகிய உழவு முறைகளும், மன்னவனைக் கையெடுத்துக் கும்பிட்டு வணங்கும் மரபுகளும் பேணப்பட்டன. இசுலாமியர்கள் கும்பிடும் வழக்கம் மற்றவராயினும் மலேசிய மன்னர்கள் இசுலாமியர்களாக இருந்தும் கை கூப்பி எழிலுறக் கும்பிடும் காட்சி மாட்சியுறத்தக்கது. மேலும் இந்து முறைப்படி மகுடம் சூட்டப்படுகின்ற பண்பாட்டுச் சடங்குகளும் மலாயர்களிடையே வரவேற்று ஏற்றுக் கொள்ளப்பட்டவை. மகுடத்தை “மகோடா” என்றும் நகரத்தை “நெகாரா” என்றும் இராஜ்யத்தை “கெராஜாஹான்” என்றும் மேலும் அரசனை “இராஜா” என்றும் அரசியைப் “பரமேஸ்வரி”என்றும் அழைக்கின்ற இந்தியப் பண்பாடுகள் மலாய்க்காரர்களால் தழுவப்பட்டன. இராஜா என்ற சொல் இசுலாமிய கலப்பிற்குப் பிறகு சுல்தான் ஆனாலும், இராணி பரமேஸ்வரியாகவே இருப்பதைக் காணலாம். பெர்லிஸ் சுல்தானை இன்றும் இராஜா என்றே அழைக்கின்றனர்.

பேராவில் மன்னன் முடிசூட்டப்பட்டுச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கையில் “ஸ்ரீ நராதிராஜா” என்பவர் சிதைந்த சமற்கிருதத்தில் வாழ்த்து வாசிக்கும் வழக்கு இன்றும் உண்டு. இதுபோல சயாம் மன்னன் முடி சூட்டப்படும்போது சிதைந்த திருவாசகப் பாடலான திருவெம்பாவை ஓதப்படுகிறது. இங்ஙனம் மலேசிய மக்களிடையே இறப்பு, இறப்பு, திருமணம், கல்வி, மருத்துவம், மந்திரம், பூசை, பணிவு,கனிவு அனைத்திலும் தமிழர்களின் பண்பாடுகளும் பழக்க வழக்கங்களும் ஊடுருவி வேரோடி நிற்பதைக் காய்தல் உவத்தலின்றி நோக்கினால் கண்டு கொள்ளலாம்.

நூலாதாரங்கள் இவற்றுக்கு விரிவாக இல்லையென்றாலும் கடாரத்தில்(கெடா) அகழ்ந்தெடுக்கப்பட்ட இந்துக் கோயிலின் அடித்தளமும், பீடோரில் கிடைத்த அவலோகிதேஸ்வரர் போன்ற சிலையும் அழியாத கலையாகிவிட்ட “ஓயாங் கூலிட் எனும் நிழலாட்ட கலைகளும் இதனை மெய்ப்பிக்கும்.மலாயா மண்ணுக்கு முதன் முதலில் நாகரிகத்தை அளித்ததுடன் இந்திய நாகரீகத்தாலும், இந்திய மொழிகளாலும் ஏற்றம் பெற்றது மலாயா மண்ணாகும் என்று ஆங்கில நூலறிஞர் ரோலன் பிராடல்(Rolland Braddol)குறிப்பிடுவதை மறுக்க முடியாது.

நன்றி: தமிழ்க்குயிலார்-ஈப்போ

3 கருத்துகள்:

ஆதவன் சொன்னது…

தமிழ்க்குயிலாரின் கட்டுரையை அருமையாகப் பதிவிட்டு இருக்கிறீர்கள். மலேசியத் தமிழர் ஒவ்வொருவரும் படித்து தமது இனவரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும். வரலாற்றை அறியாத இனம் குருட்டு இனமாக அலைமோதிக்கொண்டுதான் இருக்கும்.

வரலாற்றை அறிந்தால்தான் வாழ்வியலை செம்மையாக அமைத்துக்கொள்ள வழி உண்டாகும்.

தமிழ் ஆலயம் நாளுக்கு நாள் மெருகேறி வருகின்றது. தமிழையும் தமிழனையும் உயர்த்தும் படைப்புகளைத் தொடர்ந்து பதிவிடுங்கள்.

தமிழனைக் கைதூக்கிவிட
தமிழ் வலைப்பதிவர் நாம் பணிசெய்வோம்.

கோவி.மதிவரன் சொன்னது…

தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. வாழ்க தமிழர், வெல்க தமிழ்ப்பணி

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள்...
தொடர்க..வெல்க..!