வியாழன், 13 நவம்பர், 2008

தமிழிசை


ஒரு இனம் தனித்துவ இனமாக தம்மை அடையாளப்படுத்த தாய்மொழி,பண்பாடு, இசை, கலை, மருத்துவம், வாழ்வியல், உணவு, உடை, நாட்டியம் என்பனத் தனித்துவமானதாக இருக்க வேண்டுமென்பது இலக்கணமாகும். நமது தாய்மொழியான தமிழுக்கு இவை அத்தனை கூறுகளும் இருந்தன என்பது வரலாற்று உண்மையாகும். ஆனால், கடந்த கால அந்நியப் படையெடுப்புகளின் தாக்கத்தினால் வேற்று மொழியும் அது சார்ந்த பண்பாடும், இசையும் வேறு பலவும் மேம்பட்டன. இதன் விளைவாக தமிழினம் தனது தனித்துவத்தை மறந்து வாழப் பின்தள்ளப்பட்டது. தனித்துவமான தமிழர் இசை மறக்கப்பட்டு, வடவர் இசையும், மின்சார நாகரிகம் அறிமுகப்படுத்திய மேனாட்டு இசையும் தமிழர் இசையாக அறிமுகம் செய்யப்பட்டன. தமிழர் இசை தொல்காப்பிய காலத்திற்கு முற்பட்டது; அது தனித்துவமானது.


ஓர் இனம் தாய்மொழியையும் தன் இசையையும் இழந்து விடுகிறபோது அந்த இனம் உலக வரலாற்றில் இருந்து மறைந்து போகும் என்பது வரலாற்று உண்மை. தமிழர்களுக்கு மண் சார்ந்த இசை தாய்மொழியோடு இணைந்தே வந்துள்ளது. “தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்”என திருநாவுகரசர் வார்த்தைகளும் அதனை உறுதியாக்கியுள்ளது. தனித்துவ இசையோடு தமிழ் எழுத்து நின்றதற்கு வரலாறு உண்டு. தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தில் இசை பற்றிய செய்திகள் இருக்கின்றன.


தொல்காப்பியத்தில் பறை,யாழ் என்பன வருகின்றன. ஆகவே, இன்றைக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்ற பறையே தமிழரின் ஆதியிசைக் கருவியென்பதும் உறுதியாகிறது. இந்தப் பறையோடும் யாழும் ஆதி இசைக் கருவியே. அத்தோடு குழலும் சேர்கிறது.இதிலிருந்து தமிழிசை தனித்துவ மரபுகளோடு மட்டுமன்றி மரபு சார்ந்த இசைக்ருவிகளோடும் உருவானது என்பது உறுதியாகிறது. பண்டையத் தமிழ் இசை நூல்களில் இசைக்கருவிகள் பற்றி விரிவாக எழுதப்பட்டிருக்கின்றன. பறை எனப்படும் தோற்கருவியும், வங்கியம் அல்லது குழல் எனப்படும் துளைக்கருவிகளும், யாழ் எனப்படும் நரம்புக்கருவிகளும், மண் வெண்கலத்தால் செய்யப்படும் கஞ்சக்கருவிகள் என்பன 2000 ஆண்டுகட்கு முன்னரே அறியப் பெற்று அவற்றுக்கு இலக்கணம் எழுதப்பட்டிருக்கிறது.

உலக இசை வரலாற்றில் தமிழ் இசையே மிகத் தொன்மையான சிறந்த இசை இலக்கணப் பண்பாடுகளுடன் கூடிய இசையாகத் திகழ்ந்தது என்பதற்கு ஆதாரமாகப் பல இலக்கிய வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. மத்தளம், யாழ், குழல் ஆகிய மூன்றையும் சங்கக் காலத்தில் இசைக்கருவிகளாகக் கொண்டிருந்தார்கள். யாழ் என்னும் இசைக்கருவி பண்டையக் காலத்தில் தமிழ் மண்ணில் சிறப்பாக வழங்கி வந்தது.அது உலக இசைக் கருவியாக இருந்தது. உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியாய்த் திகழ்ந்த சிந்துவெளி நாகரிகத்தைப் புலப்படுத்தும் மொகஞ்சதாராவிலும் அரப்பாவிலும் தமிழர் கண்ட யாழ் இருந்ததை அங்கு இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள முத்திரைகளில் அறியப்படுகின்றது.

யாழ், வில்யாழ், பேரியாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ், சகோட யாழ் எனப் பலவகைப்படும்.அறுவகை சிறுபொழுதிற்கும் யாழ் எதுவென குறிக்கப்பட்டுள்ளது.

வைகறை - மருத யாழ்
நண்பகல் - பாலையாழ்
ஏற்பாடு(மாலைக்கு முன்) _ நெய்தல் யாழ்
மாலை - முல்லை யாழ்
யாமம் - குறிஞ்சி யாழ்

எனவே, பண்டையத்தமிழர் கண்டு காட்டிய தமிழிசைக்கு மறுவாழ்வு ஏற்பட வேண்டும். தமிழ் இசை முழங்கினால் தான் தமிழர் வாழ்வு, தமிழ் வாழ்வாக அமையும். தமிழர் கண்ட தமிழிசையைப் போற்றிப் பேணுவதே இற்றையத் தமிழரின் தலையாய கடமையாகும்.
நன்றி:- வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்

கருத்துகள் இல்லை: