புதன், 26 நவம்பர், 2008

மாவீரர் நாள்

இன்று நவம்பர் 27 உலகத் தமிழின விடுதலைக்காக தனது இன்னுயிரை ஈகம் செய்திருக்கின்ற ஆயிரமாயிரம் வீர வேங்கைகளை நினைவு கூறும் நாள். அவர்கள் அங்கே புதைக்கப்படவில்லை, மாறாக ஒவ்வொரு தமிழர் உள்ளங்களிலும் விதைக்கப்பட்டிருக்கின்றனர்.

தனது இன்னுயிரை ஈந்து விடுதலைப் போருக்கு வீறு சேர்த்த மாவீரர்கள் அவர்களின் தலைமுறையிலேயே போற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் தமிழீழ மாவீரர் நாள். தமிழீழ விடுதலைப் போருக்குத் தனது இன்னுயிரை நீத்த மாவீரர்களின் எண்ணிக்கை பத்து,நூறு என்ற நிலை மாறி ஆயிரக்கணக்காக உயர்ந்துவிட்ட நிலையில் ஒவ்வொரு மாவீரரையும் தனித்தனியாக ஆண்டுதோறும் அவரவர் நினைவு நாட்களில் நினைவு கூர இயலாது.எனவே, அனைவரையும் ஒரே நாளில் நினைவுகூரக் கூடியதாக தமிழீழ விடுதலைப் போரில் முதல் களச் சாவடைந்த இயக்கவீரர் லெப்டினன் சங்கரின்(சத்தியநாதன்) நினைவு நாளான நவம்பர் 27-ஆம் நாளை பொதுவான நாளாகத் தேர்ந்தெடுத்து 1989-ஆம் ஆண்டில் தலைவர் அவர்கள் மாவீரர் நாளை அறிவித்தார்.


1989-ஆம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப்பெரிய நிகழ்வாகத் தமிழீழ மாவீரர் நாள் தமிழீழ மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும்,தமிழீழம் மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு. ஏனைய நாடுகளிலெல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழா எடுக்கப்படுகின்றனவே தவிர, போராட்டம் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை. ஆனால்,விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும், எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கிடையிலும், பல்வேறு நெருக்கடிக்களுக்கிடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழ்மக்கள் மண்ணின் விடிவுக்காகத் தம் இன்னுயிரை ஈய்ந்த மாவீரர்களை எழுச்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர்.



வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்படும். நடுகற்கள் நாட்டப்படும் வழிபாடியற்றப்படுகின்றன. மாவீரர் நாளில் மாவீரர்களின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதாக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு, அன்று தமிழீழ மக்களால் போற்றி மதிப்பளிக்கப் படுகின்றனர்.
மாவீரர் நினைவாக பின்பற்றப்படும் நாட்கள்
1. கடலிற் காவியமான கிட்டு உட்பட பத்து வேங்கைகள் நினைவாக 16.01.1993

2. அன்னை பூபதி அம்மா நினைவு நாள், மார்ச்சு மாதம் 19-நாள் தொடக்கம், ஏப்பிரல் மாதம் 19-நாள் வரை


3. கரும்புலிகள் நாள் 05.07.1987

4. தியாக தீபம் திலீபன் நினைவுநாள். செப்தம்பர் 15-ஆம் நாள் தொடக்கம் செப்தம்பர் 26-ஆம் நாள் வரை.

5. குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 வேங்கைகள் நச்சுக்குப்பி கடித்து வீரச்சாவடைந்த நாள் 05.10.1987

6. தமிழீழ விடுதலைப் போரில் இன்னுயிர் ஈய்ந்த முதற் பெண்புலி மாலதி( தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்) 10.10.1987

7. மாவீரர் நாள், நவம்பர் 25 தொடக்கம் 27 வரை
நன்றி : "மாவீரர் நாள் கையேடு"

1 கருத்து:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

மாவீரர் நாள் நினைவுப் பதிவு வெளியிட்டு தமிழீழ மாவீரர்களுக்கு வீர வணக்கம் செய்குவோம்.

நம்மால் ஆகக்கூடிய இதையாவது செய்து; நமது உடன்பிறப்புகளுக்குத் தோளுரம் கூட்டுவோம்.

மாவீரர் நாள் நளைய மலரவுள்ள தமிழ் ஈழத்திலும் சரி தமிழர் வாழும் நாடுகளிலும் சரி, தமிழ்த்தேசிய நாளாகக் கொண்டாடப்பட வேண்டும்.