புதன், 17 செப்டம்பர், 2008

தமிழ்ச் செம்மொழி நாள்

செம்மொழி யாவினும் செம்மொழி



செம்மொழி யாவினும் செம்மொழி எம்மொழி?
செந்தமிழ் தானடியோ!
இம்மொழி எம்மொழி என்கையில் எம்மனம்
ஏறுது வானடியோ!

இம்மொழி போலொரு வண்மொழி தொன்மொழி
மண்மிசை ஏதடியோ!
எம்முறை தேரினும் எந்நெடுங் காலமும்
செம்மொழி ஈதடியோ !

எம்மொழி யாயினும் அம்மொழி சேய்மொழி
எம்மொழி தாயடியோ!
எம்மொழி சொல்லினும் இன்மொழி யாகுதே
இம்மொழி விண்மொழியோ!

எம்மவர் ஆண்மையும் எம்மின மேன்மையும்
இம்மொழி யாமடியோ!
எம்முயிர் எம்முடல் எம்பொருள் யாவினும்
எந்தமிழ் மேலடியோ!

செம்மையும் தூய்மையும் சீர்குறை யாமலே
செய்குவம் தொண்டடியோ!
மும்மையும் செந்தமிழ் மூவா மொழியென
முந்துற வாழியரோ!

ஆக்கம்;
நல்லார்கினியனார்
செ.சீனி நைனா முகம்மது

  • குறிப்பு :(வல்லின மெய் இல்லாத பாட்டு)
வண்மொழி (வளம்)
மண்மிசை இதுபோல் ஏது ?(தனித்தன்மை)
எந்நெடுங்காலமும் செம்மொழி (நிலைபேறு)
எம்மொழி சொல்லினும் இன்மொழி(இனிமை)
செம்மை (ஒழுங்கு)
மும்மையும் மூவா மொழி(இளமை)
தொன்மொழி (பழமை)
எம்முறை தேரினும் செம்மொழி(முழுமை)
தாயடியோ(மூலத்தன்மை)
விண்மொழி(மேன்மை)
தூய்மை(தனித்தியங்கும் ஆற்றல்)
முந்துற வாழி(முதன்மை)

  • நன்றி:-தமிழ்ச் செம்மொழி சிறப்பு மலர்

கருத்துகள் இல்லை: