வெள்ளி, 26 செப்டம்பர், 2008

சொற்சிறப்பு


உலக மொழிகளிலே தமிழ்மொழியைத்தான் மூன்றாக வகைப்படுத்திச் சிறப்பித்து முத்தமிழ் என்றார்கள். தமிழ்மொழிக்குள்ள சிறப்புகளுள் சொற்சிறப்பு என்பதும் ஒன்று. ஓர் எழுத்தே சொல்லான விந்தை தமிழில் தான் இருக்கின்றது. எடுத்துக்காட்டுக்குச் சிலவற்றைப் பார்ப்போம்.

1. ஆ-பசு 2. நா- நாக்கு 3. கோ-மன்னன் 4. தீ-நெருப்பு 5. ஈ- ஓர்உயிர்
6. பூ- மலர் 7. மா- குதிரை 8. மை- கண்மை 9. பா- பாடல் 10. தை-மாதம்


ஆங்கில மொழியில் ஓர் எழுத்துச் சொல் அர்த்தம் கொண்டவையாக இருக்கின்றனவா என்றால் இல்லை என்பதே பதில். ஆனால் தமிழில் மட்டும் ஓரெழுத்து சொல்லான விந்தை உண்டு.

பிறமொழிச் சொற்கள் வெறுமனே உருவத்தை மட்டுமே காட்டுகின்றன. ஆனால், தமிழ்மொழிச் சொற்கள் உருவத்தையும் பருவத்தையும் சேர்த்தே காட்டக் கூடியன. காட்டுக்கு சில:-

1. பாலன் - 7- வயதுக்கும் கீழ்
2. மீளி - 10- வயதுக்கும் கீழ்
3. மறவோன் - 14- வயதுக்கும் கீழ்
4. திறலோன் - 14- வயதுக்கு மேல்
5. காளை - 18- வயதுக்கு மேல்
6. விடலை - 30- வயதுக்குக் கீழ்
7. முதுமகன் - 30- வயதுக்கு மேல்


இந்த ஏழு பருவத்தை

1. பிள்ளை - குழந்தைப் பருவம்
2. சிறுவன் - பால பருவம்
3. பையன் - பள்ளிப்பருவம்
4. காளை - காதற்பருவம்
5. தலைவன் - குடும்பப் பருவம்
6. முதியோன் - தளர்ச்சிப் பருவம்
7. கிழவன் - மூப்புப் பருவம்

என்றும் சொல்லலாம். இதே போன்று பெண்களின் ஏழு பருவத்தையும் வேன்வேறு சொற்களில் அழைக்கின்றனர்.

1. பேதை - 5- வயதுக்கும் கீழ்
2. பெதும்மை - 10- வயதுக்கும் கீழ்
3. மங்கை - 16- வயதுக்கும் கீழ்
4. மடந்தை - 25- வயதுக்கும் மேல்
5. அரிவை - 30- வயதுக்கும் கீழ்
6. தெரிவை - 35- வயதுக்கும் கீழ்
7. பேரிளம்பெண் - 55- வயதுக்கு கீழ்

மனிதனின் இந்த ஏழு பருவத்துக்கும் சாதாரண மக்கள் பயன் படுத்துகிற ஆங்கிலச் சொற்கள் என்ன? “baby யும் “Child”ம் ஒரே அர்த்தம் கொண்டவை. அப்புறம் “young Boy”என்றும் “Adult Man”என்றும் “Young Man” என்றும் “old Man” “old lady” என்றும் சொல்வது தமிழைப்போல் பருவத்திற்கு ஏற்ப பொருந்துமா ?

ஒரு பூவை எடுத்துக் கொண்டால் கூட உருவத்தையும் அதன் பருவத்தையும் காட்ட பலமொழிகளுக்குச் சொற்பஞ்சம்; தமிழில் அவ்வாறு இல்லை

1. அரும்பு - அரும்பும் நிலை
2. மொட்டு - மொட்டு விடும் நிலை
3. முகை - முகிழ்க்கும் நிலை
4. மலர் - பூ நிலை
5. அலர் - மலர்ந்த நிலை
6. வீ - வாடும் நிலை
7. செம்மல் - இறுதி நிலை

பூவிற்குத்தான் இப்படி பருவப் பெயர்கள் என்றால் இலைகளுக்கும் பல பருவங்களுக்கேற்பத் தமிழ்லி சொற்கள் வருகின்றன

1. கொழுந்து - குழந்தைப் பருவம்
2. தளிர் - இளமைப்பருவம்
3. இலை - காதற்பருவம்
4. பழுப்பு - முதுமைப்பருவம்
5. சருகு - இறுதிப்பருவம்

இந்த இலை என்ற சொல்கூட ஆல், அரசு, அத்தி, பலா, மா, வாழை போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டுமே பொருந்தும். இதுவெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தமிழில் சொற்களுக்குப் பஞ்சமே இல்லை. அறிவியலுக்கும் உகந்த மொழி. தமிழின் வரலாற்றிலேயே அறிவியல் இருந்திருக்கிறது.

தேனைத் தொட்டு நாக்கில் தடவிப்பார்த்தால் அடன் சுவை புரியும். தேன் கூட்டில் இருக்கும் போது அதன் சுவையை எப்படி சுவைக்க முடியும்? தமிழைப் படிக்காத தமிழர்களால் அதன் பெருமையை எவ்வாறு உணர முடியும்? சிலர் தமிழில் உள்ள சொற்கள் புரியவில்லை என்கிறார்கள். புரியும் மொழி, புரியா மொழி என எந்த மொழியிலும் இல்லை. ஒருமொழி புரியவில்லை என்றால் அந்த மொழியைச் சரியாகக் கற்கவில்லை என்றுதான் பொருள்படும். தமிழைப் படித்துக் கொண்டே போனால் அதன் கதவுகள் திறந்து கொண்டே போகும்.



நன்றி:- வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்

1 கருத்து:

ஆதவன் சொன்னது…

வணக்கம் ஐயா.

இந்தக் கட்டுரை முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதிய தமிழின் சிறப்பு என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. அதனை, வியக்க வைக்கும் தமிழர் அறிவியல் நூலில் மாத்தளை சோமு எடுத்தாண்டுள்ளார்.

நல்ல செய்தியை வழங்கியுள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.